யாருங்க யாரச் சொல்றீங்க என்று கேட்கிறீர்கள் என்றால், நீங்கள் பாவம் இன்னும் குஜராத் வியாபாரி நிதின் சந்தேசராவைப் பற்றி படிக்க வில்லை என்று அடித்துச் சொல்லலாம்.
யார் இவர்
ஸ்டெர்லிங் பயோடெக் என்கிற பார்மாசியூட்டிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்தவர் நிதின். மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு ஸ்எலிங் பயோடெக் இயங்கி வருகிறது. இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பது கூடுதல் செய்தி. கடந்த மார்ச் 2017 நிதி அறிக்கைகள் படி இந்த நிறுவனத்துக்கு 4,949.72 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.
என்ன செய்தார்
கடனை வாங்கிக் பிசினஸ் செய்து, நஷ்டமடைந்து கட்ட முடியாமல் ஓடவில்லை. திட்டமிட்டு 300-க்கும் மேற்பட்ட பினாமி கம்பெனிகள், நஷ்டத்தைக் காட்ட ஏகப்பட்ட போலிக் கம்பெனிகளை நடத்தி இருக்கிறார். வாங்கிய கடனை எல்லாம் இந்த பினாமி மற்றும் ஷெல் கம்பெனிகளுக்கு வங்கியின் அனுமதி இல்லாமல் மடை மாற்றி கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார். ஆனால் நிதி நிலை அறிக்கைகளில் மட்டும் "எங்களுக்கு நஷ்டமுங்க" என்று அப்பாவியாக கையெழுத்து போட்டிருக்கிறார்.
வேறு என்ன செய்தார்
மேலே சொன்ன 300 பினாமி மற்றும் போலி கம்பெனிகளில், பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றன. இவர் ஸ்டெலிங் பயோடெக் கம்பெனிக்கு வாங்கிய கடன் தொகையை அப்படியே அந்த வெளிநாட்டு போலி மற்றும் பினாமி கம்பெனிகளுக்கு அனுப்பி, பணச் சலவை செய்திருக்கிறார். இல்லாத வியாபாரத்தை இருப்பதாகக் காட்டி இருக்கிறார். வாங்காத பொருட்களை வாங்கியதாகவும், விற்காத பொருளை விற்றதாகவும் முழுசாக அரசுக்கு நாமம் போட்டிருக்கிறார். ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் பணி புரியும் பலரை, அவரது போலி நிறுவனங்களுக்கும், பினாமி நிறுவனங்களுக்கும் இயக்குநராகக் காட்டி அசால்டாக அரசை ஏமாற்றி இருக்கிறார் இந்த குஜராத்காரர்.
குடும்பமே எஸ்கேப்
இத்தனை பிரச்னைகளை கண்ட பின் தான் நம் சிபிஐ மற்றும் இடி என்றழைக்கப்படும் வருவாய் அமலாக்கத்துறை நெருங்கி விசாரிக்கத் தொடங்கி இருந்தது. அதற்குள் நிதின் எங்கோ வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார். சரி இவர் தான் தப்பித்துவிட்டார், இவர் வீட்டில் யாரையாவது பார்த்து விசாரிக்கலாம் என்று நிதினின் வீட்டுக்குப் போன சிபிசிக்கு கிடைத்ததோ பெரிய பூட்டு தான். அக்கம் பக்கத்தில் விசாரித்தால், அவர்கள் கிளம்பி சில வாரங்கள் இருக்கும், யாரும் இங்கு வந்ததாகத் தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.
யார் மீது எல்லாம் வழக்கு
நிதின் மற்ரும் அவரது குடும்பத்தினர்கள், ராஜ் புஷன் ஓம்பிரகாஷ், ஆந்திரா வங்கியின் முன்னால் இயக்குநர் அனூப் கார்க், ஸ்டெலிங் நிறுவனத்தின் பட்டயல் கணக்காளர் ஹேமந்த் ஹதி என்று ஒரு பெரிய லிஸ்டையே தயாரித்திருக்கிறது சிபிஐ மற்ரும் அமலாக்கத்துறை.
தவறான தகவல்
இப்படி தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த சிபிஐக்கு, நிதின், தன் குடும்பத்தோடு துபாயில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதையும் அப்படியே ஆராய்ந்து பார்த்தால் பொய்த் தகவல். சரி ஒருவேளை கிடைத்தால் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அரபு அமீரகத்துத்திடம் கேட்டுக் கொண்டது சிபிஐ.
இப்போ எங்க
இவர் தற்போது நைஜீரியாவில் தான் குடும்பத்தோடு இருக்கிறார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து சிபிஐக்கு செய்தி கிடைத்திருக்கிறதாம். இந்திய அரசுக்கே தெரியாமல், இத்தனை நாடுகள் மாறி போய் இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் வேறு ஏதோ நாட்டின் பாஸ்போட் போன்ற டாக்குமென்ட்களைத் தான் பயன்படுத்துகிறார்கள் என சிபிஐ தெரிவித்திருக்கிறது.
இந்தியாவுக்கு என்ன பிரச்னை
இந்திய அரசு பெரும்பாலான ஆப்பிரிக்க அரசாங்கத்தோடு extradition treaty (இந்தியாவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தியன் கிடைத்தால், அவர்களைப் பிடித்து மீண்டும் இந்திய அரசிடம் ஒப்படைப்பது) போட்டுக் கொள்ளவில்லை. எனவே நைஜீரியாவில் நிதினை தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் தான் என்று சிபிஐ இப்போது ஒரு கேள்விக்குறையை போட்டிருக்கிறது.