இந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் நிறுவனமான ஜெப்பே வெள்ளிக்கிழமையுடன் இழுத்து மூடப்பட்டது. கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் நிறுவனங்களுக்கு நிதி சேவைகளை ஆர்பிஐ தடை செய்த 5 மாதங்களுக்குப் பிறகு ஜெப்பே மூடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் கடந்த ஒரு ஆண்டாகவே பிட்காயின் போன்ற மெய்நிகர் கரன்சிகள் பாதுகாப்பானது அல்ல என்று கூறி வருகிறது.
ஜெப்பே
ஜெப்பே கிரிப்டோகரன்ஸி எக்ஸ்சேஞ் நிறுவனமானது வெள்ளிக்கிழமை மாலை 4 மணியுடன் தங்களுக்கு வந்த அனைத்து கிரிப்டோ - கிரிப்டோ ஆர்டர்களையும் ரத்து செய்துவிட்டுப் பணத்தினை ஜெப்பே வாலெட்டில் செலுத்திவிட்டது.
மீண்டும் வருமா?
அடுத்த அறிவிப்புகள் வரும் வரை புதிதாக எந்த ஒரு ஆர்டனிரையும் ஜெப்பே ஏற்காது என்று தங்களது பிளாகில் தெரிவித்துள்ளது. அதே நேரம் தொடர்ந்து ஜெப்பே வாலெட் பயன்பாட்டில் இருக்கும் என்றும் எக்ஸ்சேஜ் சேவை மட்டுமே துண்டிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
லட்சம் கணக்கான இந்தியர்கள் ஜெப்பே மூலம் பிட்காயின் உள்ளிட்ட கிர்ப்டோகரன்ஸிகளை வாங்கியுள்ளனர். உங்களது நம்பிக்கை தான் எங்களது பலம். வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகளை மீறி எங்களால் தற்போதைக்கு இயங்க முடியாது. எனவே விரைவில் புதிய வகையில் திரும்ப வருவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி 2018 ஏப்ரல் 5-ம் தேதி வங்கிகள் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை ஏற்க கூடாது என்று உத்தரவிட்டதன் பேரில் ஒவ்வொரு வங்கிகளாகத் தடையினை அமலுக்குக் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஜெப்பேவும் ரூபாய்களை டெபாசிட்களாகப் பெறுவதை நிறுத்தி வைத்து இருந்தது.
இந்தியாவின் பல நிறுவனங்கள் இந்தப் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி வணிகத்தில் ஈடுபடுவதை அறிந்த ஆர்பிஐ இது அடுத்த ஹவாலா பணப் பரிமாற்ற முறையாக மாறிவிடும் என்ற அச்சத்தில் இந்த முடிவினை எடுத்தது.
நிதி அமைச்சகம்
அதே நேரம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நிதி அமைச்சகம் மெய்நிகர் கரன்சிகளைத் தடை செய்யவில்லை என்றும் அதே நேரம் அது சட்டப்பூர்வமானது இல்லை என்று தெரிவித்து இருந்தது. மேலும் விரிச்சுவல் கரன்சி எனப்படும் மெய்நிகர் கரன்சிகள் நாணம் அல்ல என்றும் காயின் என்றும் அவற்றுக்கு மதிப்பு இல்லை என்றும் சர்வதேச அளவில் கூறிவருகின்றனர்.