உலகின் மிகப் பெரிய டெக் நிறுவனமான கூகுள் ஆர்குட் சமுக வலைத்தளத்தினை மூடிய பிறகு கூகுள் பிளஸ் என்ற சமுக வலைத் தளத்தினை அறிமுகம் செய்தது. இந்த இணையதளம் பேஸ்புக் போட்டியாகத் தொடங்கப்பட்டாலும் அதனால் எந்த ஒரு தாக்கமும் இல்லை. இருந்தாலும் தேடு பொறி தளம் மூலம் கூகுள் உலகின் முக்கியமான டெக் நிறுவனமாக உள்ளது.
இவ்வளவு பெரிய கூகுள் நிறுவனத்தில் இதுவரை இல்லாத அளவில் கூகுள் பிளஸ் தளத்தின் 5 லட்சம் பயனர்களின் விவரங்கள் திருடப்பட்டதை அடுத்து இந்தத் தளத்தினை இன்னும் 10 மாதத்தில் மூட இருப்பதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தைச் சரிவு
கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் தளத்தின் பயனர்கள் தரவுகள் திருடு போனதுடன் முதல் செஷனில் 0.9 சதவீதம் வரை சரிந்த நிலையில் சந்தை நேர முடிவில் கிட்டத்தட்ட 1.1 சதவீத சந்தை மதிப்பினை சரிந்தது.
எவ்வளவு கோடிகள் இழப்பு?
கூகுள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனம் 808 பில்லியன் டாலருக்கு அதிகமாக உள்ள நிலையில் நேற்றைய இந்தத் தகவல் திருட்டுச் செய்திகள் வெளியானதை அடுத்து ஒரே அடியாக 65,000 கோடி ரூபாயினை இழந்துள்ளது.
மோசடி
கூகுள் பிளஸ் தளத்தில் இந்த மோசடிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனை அடுத்து விளக்கம் அளித்த கூகுள் நிறுவனம் இந்தத் தரவுகள் இதுவரை யாராலும் குற்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
எந்த விவரங்கள் எல்லாம் திருடப்பட்டது?
கூகுள் பிளஸ் தளத்தில் வயது, பாலினம், வேலை, மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மட்டும் தான் திருடு போய் உள்ளது என்றும் எந்த ஒரு பயனரின் புகைப்படங்களும் திருடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மூடல்
இதுவரை கூகுள் நிறுவனத்தில் நடைபெறாத மோசடி என்பதால் கூகுள் பிளஸ் தளத்தினை அடுத்த 10 மாதத்தில் மூட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
புதிய தளம்
கூகுள் பிளஸ் தளம் மூடப்படும் நிலையில் புதிய சமுக வலைத்தளத்தினைக் கூகுள் வெளியிடுமா என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.