இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமானம் மற்றும் நிதி நிறுவனமாக இருந்த வந்த ஐ.எல்&எஃப்எஸ் திவாலாகியுள்ளது. ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனம் மீது 91,000 கோடி ரூபாய் கடன் மட்டும் உள்ளது. அதில் 61 சதவீதம் வங்கிகள் அளித்த கடன் ஆகும்.
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கினை ஐ.எல்&எஃப்எஸ் வகித்து வந்த நிலையில் அதற்கு அந்நிறுவனத்தின் இடர் மேலாண்மை குழு சரியாக இயங்காததே என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
நிதி அமைச்சகம்
ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்தினை இந்த நிலையில் இருந்து வெளிக்கொண்டு வர மத்திய நிதி அமைச்சக தலையிட்டு புதிய நிர்வாகக் குழுவை அமைத்து வருகிறது. இருப்பினும் ஒரு நிறுவனம் திவால் ஆகும் நிலையில் இயங்கி வரும் நிலையில் 91,000 கோடி வரை கடன் பெற்றுள்ளது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.
நம்பிக்கை இழப்பு
மறுபக்கம் ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனம் மீதான நம்பிக்கையினைத் தற்போது உள்ள நிர்வாகக் குழுவும் முதலீட்டாளர்களும் இழந்துள்ளனர்.
எவ்வளவு தேவை?
இந்நிலையில் ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்தினை ஓர் அளவிற்குக் கடனில் இருந்து மீட்டு மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் குறைந்தது 30,000 கோடி ரூபாய் சந்தை மூலதனமாகத் தேவைப்படுகிறது. 30,000 கோடி இருந்தால் தான் நிறுவனத்தினை இயக்க முடியும் என்பதால் தான் தலைப்பின் பெட்ரோல் என்று குறிப்பிட்டோம். பெட்ரோல் இல்லாமல் எப்படி வங்கி இயங்காதோ அதே போன்று இந்தப் பணம் இல்லாமல் ஐ.எல்&எஃப்எஸ் இயங்குவது கடினம்.
ஒப்பீடு
ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்தினை மீண்டும் எந்தச் சிக்கலும் இல்லாமல் இயங்க வைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தத் தொகை என்ற நிலையில் அது இந்தியாவின் மொத்த மருத்துவப் பட்ஜெட்டில் பாதித் தொகை என்றும், உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமான மோடி கேர் எனப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஒதுக்கியதை விட மூன்று மடங்கு அதிக நிதி இதற்குத் தேவை என்றும் கூறப்படுகிறது.
சொத்துக்களை விற்றல்
மேலும் ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்தின் சில சொத்துக்களை விற்றும் இந்தக் கடன் அளவினை குறைப்பதற்காகப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ரெடெட் நிறுவனம் வெளியிட்ட அளிக்கையில் ஐ.எல்&எஃப்எஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஐ.டி&என்எல் நிறுவனங்களைக் கடனில் இருந்து மீட்க குறைந்தது 29,500 கோடி ரூபாய் தேவை என்றும் தெரிவித்துள்ளது.
கோடாக் கருத்து
கோடாக் நிறுவனம் ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்திற்கு 2018 மார்ச் 31-ம் தேதி வரை 91,000 கோடி ரூபாய் கடன் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அது தற்போது அதனை விடக் கூடுதலாகத் தா இருக்கும் என்றும் கூறியுள்ளது.
முக்கியச் சொத்துக்கள்
ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்திடம் 13,493 கிலோ மீட்டர் தொலைவிலான சாலைச் சொத்துக்கள், 2800 மெகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்கள், 21,800 கோடி மதிப்பிலான வங்கி அல்லா நிதி நிறுவன சொத்துக்கள் உள்ளன.
சொத்துக்களை விற்றால் கடன் தீருமா?
இந்தச் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுக் கடனை அடைக்க வேண்டியது தானே. ஏன் அரசு இதில் தலையிடுகிறது என்று கேட்கலாம். இந்தச் சொத்துக்கள் அனைத்தையும் விற்றால் கூட ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்தினை அதன் கடனில் இருந்து மீட்க முடியாதாம். அவற்றை விற்ற பின்னரும் மிகப்பெரிய தொகை கடனை அடைக்கத் தேவைப்படும் என்றும் கூறுகின்றனர். அதன் காரணமாகவே அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் நிறுவனத்தினைக் கொண்டு சென்றுள்ளது.
எப்படி இந்தக் கடன் விவகாரம் வெளியில் வந்தது?
கடந்த சில மாதங்களாகவே ஐ.எல்&எஃப்எஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான வட்டி மற்றும் அசலை திருப்பிச் செலுத்தாமல் வந்ததை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடன் அளித்துள்ள முக்கிய வங்கிகள்
பஞ்சாப் & சிண்ட் வங்கி, யூகோ வங்கி, யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்டவை ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்திற்குக் கடன் அளித்துவிட்டுத் தற்போது என்ன செய்வது என்று அறியாமல் காத்துக்கிடக்கின்றனர். அரசு வங்கி நிறுவனங்களை விடப் பல தனியார் வங்கி நிறுவனங்களும் கடன் அளித்துள்ளன என்றும் கூறப்படுகின்றது.
முக்கியப் பங்குதாரர்கள்
எல்ஐசி வசம் ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனத்தின் 25.34 சதவீத பங்குகளும், ஜப்பானின் ஓரிக்ஸ் காப்ரேஷன் வசம் மட்டும் நிறுவனத்தின் 23.54 சதவீத பங்குகளும் உள்ளன. இதனைத் தவிர அபு துபாய் இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி (12.56%), எச்டிஎப்சி (9.02%), செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (7.67%) மற்றும் எஸ்பிஐ வங்கி (6.42% ) வசமும் ஐ.எல்&எஃப்எஸ் நிறுவனப் பங்குகள் உள்ளன.