உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராகச் சவுதி அரேபியா நவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாக 4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யினை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
சவுதி அரேபியா
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியா பெற்று வந்த கச்சா எண்ணெய்யில் தட்டுப்பாடு நிலவக்கூடாத என்ற காரணங்களுக்காகச் சவுதி அரேபியா இந்த முடிவினை தானாக முன்வந்து எடுத்துள்ளது.
இந்தியா
சீனாவிற்கு அடுத்தப் படியாக இந்தியா தான் ஈரானில் இருந்து அதிகப்படியாகக் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்து வந்தது. பொருளாதாரத் தடை நவம்பர் 4 முதல் அமலுக்கு வருவதால் அதன் பிறகு இந்தியாவால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்ய முடியாது.
எதிர்பார்ப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் மங்களூரு ரிஃபைனரி உள்ளிட்ட நிறுவனங்கள் நவம்பர் மாதம் முதல் கூடுதலாக 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யினைச் சவுதி அரேபியாவிடம் இருந்து எதிர்பார்க்கின்றன.
எண்ணெய் நிறுவனங்களின் தேவை
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் மாதம் ஈரானிடம் இருந்து 9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்ய ஆர்டர்கள் அளித்து இருந்தன. மறு பக்கம் எப்படியாவது ஈரான் எண்ணெய்யை இறக்குமதி செய்ய விலக்கு அளிக்கப்படாதா என்றும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
அமெரிக்காவை எதிர்த்து ஈரானுடன் வர்த்தகம் செய்ய இருக்கும் நாடுகள்
மறு புறம் பிரட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட 5 நாடுகள் அமெரிக்காவினை எதிர்த்து ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பிற வணிகங்களைத் தொடர்வதற்கான ஒப்பந்தங்களையும் போட்டுள்ளனர். இதற்காகத் தனிப் பரிவர்த்தனை முறையினை இந்த நாடுகள் அறிமுகம் செய்துள்ளனர்.
தட்டுப்பாடு
சவுதி கூடுதலாக 4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சப்பளை செய்தால் கூடுதலாக இந்தியாவிற்கு 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படும். இதனால் இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.