எச்சிஎல் டெக்னாலஜிஸ் 2018-2019 நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதன் படி எச்சிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து 2,534 கோடி ரூபாயாக உள்ளது என அறிவித்துள்ளனர்.
டாலர் வருவாயும் 2.1 சதவீதம் உயர்ந்து 2,099 மில்லியன் டாலராக உள்ளது. ரூபாய் மதிப்பில் எச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் உயர்ந்து 14,860 கோடி ரூபாயாக உள்ளது.
வருவாய்
வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் 2.2 சதவீதம் உயர்ந்து 2,922 கோடி ரூபாயாக உள்ளது. இந்த வருவாய் உயர்வுக்கு மென்பொருள் பிரிவே காரணம் என்றும் எச்சிஎல் தெரிவித்துள்ளது.
டிவிடண்ட்
மேலும் 2 ரூபாய் மதிப்பிலான ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடண்ட்டாக 2 ரூபாயினை அளிக்க எச்சிஎல் டெக்னாலஜிஸ் போர்டு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த டிவிடண்ட் தொகை 2018 நவம்பர் 11-ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ரோஷ்னி நாடார்
மேலும் போர்டு இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவராக ஷிவ் நாடாரின் மகளான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பங்குகள் நிலவரம்
சந்தை நேர முடிவில் காலாண்டு அறிக்கை முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் எச்சிஎல் பங்குகள் 27.30 புள்ளிகள் என 2.79 சதவீதம் சரிந்து 952.75 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.