டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்.சந்திரசேகரன் தற்போது டாடா குழுமத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் டிசிஎஸ் நிறுவனம் பல மடங்கு உயர்ந்தது மட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் பிற துறை வர்த்தகம் சரிந்த போது அதனை ஈடு செய்யும் வகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தினார்.
டிசிஎஸ் டூ டாடா குழுமம்
டிசிஎஸ் நிறுவனத்தை விட்டு டாடா குழுமத்தின் தலைவராக இவர் பதவியேற்ற போது டாடா குழுமத்தின் மொத்த வருமானத்தில் 85 சதவீத வருமான டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு
இந்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் சந்திரசேகரனின் சம்பளத்தைப் பார்க்கும் போது டிசிஎஸ் தலைவராக அவர் பெற்ற சம்பளத்தை விடத் தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
லாபத்தில் பங்கு
மார்ச் 2018 உடன் முடிவடைந்த நிதியாண்டில் 56 வயதான சந்திரசேகரன் சுமார் 55.11 கோடி ரூபாயை மொத்த சம்பளமாகப் பெற்றுள்ளார். இதில் 85 சதவீத தொகை கமிஷன் மற்றும் லாபத்தில் பங்கீடு என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் சுமார் 100 நிறுவனங்களுடன் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உப்பு முதல் மென்பொருள் வரையில் பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இக்குழுமத்தின் மொத்த மதிப்பு மட்டும் 103 பில்லியன் டாலர். இந்த மாபெரும் நிறுவனத்தைத் தலைவராகப் பிப்ரவரி 2017ஆம் ஆண்டுச் சந்திரசேகரன் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
டிசிஎஸ் - சம்பளம்
2017ஆம் நிதியாண்டில் 11 மாதம் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய போது இவர் 30.15 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார்.
சைரஸ் மிஸ்த்ரி
பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி-யின் சம்பளத்தை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகச் சம்பளத்தைச் சந்திரசேகரன் பெறுகிறார். சைரஸ் 16 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றார்.