இந்தியாவின் 4-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ 2018-2019 நிதி ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டின் அறிக்கையினைப் புதன் கிழமை வெளியிட்டது. அதில் லாபம் 13.8 சதவீதம் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது விப்ரோவின் நிகர லாபம் 11 சதவீதம் சரிந்து 2,121 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 13.8 சதவீதம் சரிந்துள்ளது.
வருவாய்
லாபம் சரிந்த அதே நேரம் வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள விப்ரோ சென்ற வருடத்தின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 9.2 சதவீதம் வருவாய் அதிகரித்து 14,541 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செலவுகள் அதிகரிப்பு
செப்டம்பர் காலாண்டில் விப்ரோவின் செலவு அதிகரித்ததே இந்த நிகர லாபம் இழப்பிற்குக் காரணம் என்றும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது செலவுகள் 13 சதவீதம் அதிகரித்து 12,628 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பங்குகள் மீதான வருவாய்
விப்ரோவின் 2 ரூபாய் மதிப்பிலான ஒரு பங்கு மீதான வருவாய் முதல் காலாண்டில் 4.71 ரூபாயாக இருந்து வந்த நிலையில் 2-ம் காலாண்டில் 1.19 ரூபாயாகச் சரிந்துள்ளது.
ஊழியர்கள் நிலை என்ன?
லாபம் சரிந்துள்ளதால் நடப்புக் காலாண்டில் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையினை விப்ரோ குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விப்ரோ நிறுவனத்தின் இந்தச் சரிவுக்கு அவர்களுக்கு முக்கிய வாடிக்கையாளர்கள் பலர் திவால் ஆனதே காரணம் என்றும் கூறப்படுகிறது.
அருந்ததி பட்டாச்சாரியா
எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சாரியாவினை தனிப்பட்ட இயக்குநராக நியமிப்பதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு சந்தை
காலாண்டு அறிக்கை வெளியாக இருந்த நிலையில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் சந்தை நேர முடிவில் 0.05 புள்ளிகள் என 0.02 சதவீதம் சரிந்து 309.25 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.