டெலிகாம் சந்தையின் ராஜாவாகத் திகழும் ஏர்டெல் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் எப்போதும் இல்லாத வகையில் லாபத்தில் சுமார் 65 சதவீத சரிவை சந்தித்து இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வரி பிந்தைய லாப அளவீட்டில் இந்நிறுவனத்தின் லாபம் 343 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 118.80 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இக்காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 21,776.90 கோடி ரூபாயில் இருந்து 20,422.50 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதனால் வருவாயிலும் 6.20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது ஏர்டெல்.
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளச் சக போட்டி நிறுவனங்களுக்கு இணையாகக் குறைந்த விலையில் சேவையும், மேம்பட்ட தரவுகளை அளிக்கும் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டு வரையில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 445 மில்லியன் ஆகும்.