ஒரு பக்கம் asaram bapu வின் பக்தர்கள், கண்ணீர் மல்க ட்விட்டரில் அவரின் சேவைகளை டைப்பியே நேற்று #SelflessServicesByBapuji tag-ஐ இந்திய டிரெண்டு ஆக்கிக் கொண்டிருந்தார்கள். இவரை விடுதலை செய்யுமாறு இவரின் பக்தர்கள் இன்னும் வேறு பல சோஷியல் மீடியாக்களிலும் கதறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டின் தலைவர் ரேஞ்சுக்கு, இவருக்காக ஏன் பக்தர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் இவர்? என்ன செய்தார்? ஏன் நீதிமன்றம் இவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை கொடுத்து வதைக்கிறது...? இவரின் பக்தர்களுக்கு செவி சாய்த்து விடுதலை செய்தால் தான் என்ன...? இவருக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்...? வாங்க பாப்போம்.
அறிமுகம்
17 ஏப்ரல் 1941-ல் இன்று பாகிஸ்தானில் இருக்கும் பெரானி கிராமத்தில் பிறந்த அசுமல் சிருமலானி ஹர்பலனி (Asumal Sirumalani Harpalani) தான் இன்று asaram bapu. இந்தோ பாக் பிரிவினை போது குடும்பத்தோடு 1947-ல் அஹமதாபாத்துக்கு குடியேறி நிலக்கரி, மர வியாபாரத்தைக் கையில் எடுத்தார். அது ஊத்தி முழுக டீ வியாபாரம். அதுவும் காலியாக, சாராய வியாபாரம்... இப்படி நல்ல வியாபாரத்தைத் தேடி அலைந்து ஓய்ந்தவருக்கு ஆன்மீகம் கைகொடுத்தது.
ஜீவன் ஜான்கி
asaram bapu-வின் சுய சரிதை புத்தகமான "Sant Asaram Bapuji Ki Jeevan Jhanki"யில் இவர் ஜெய் ஹிந்த் உயர் நிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்தது, பள்ளிப் பருவத்திலேயே அருகில் இருந்த ஆஸ்ரமங்களுக்கு சென்று ஞானம் தேடியது, 15 முதல் 23 வயதுக்குள் பல ஆஸ்ரமங்களுக்கு ஓடிப் போனது எல்லாம் இருக்கிறது.
திருமணம்
15 வயதிலேயே லட்சுமி தேவியை மணந்து, நாராயண் சாய், பாரதி தேவி என்று இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனும் ஆகிவிட்டார். ஒருவழியாக லீலாஷா என்கிற குரு தான் 07 அக்டோபர் 1964-ல் தீட்சை கொடுத்து இவரை asaram bapu ஆக்கினார்.
தனி ஆஸ்ரமம்
அஹமதாபாத்தின் மொடேராவில் இருக்கும் சதாசிவ ஆஸ்ரமத்தில் இரண்டு வருடம் தங்கி, ஆஸ்ரமம் என்றால் எப்படி இருக்கும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லாம் படித்துக் கொண்டார். 1973 வாக்கில் தனியாக ஆஸ்ரமம் தொடங்கினார் asaram bapu. ஆஸ்ரமத்தின் பெயர் Sant Shri Asharamji Ashram. அதாவது சாது அஸ்ரம்ஜியின் ஆஸ்ரமம் எனப்து தான் பொருள்.
அஸ்ரம் பிசினஸ் டெக்னிக்
1973-களிலேயே பிராணாயாமம், யோகா, அக்னிசார் க்ரியா, தியானம் என்று பல பழைய ஐட்டங்களை repack செய்து சம்பாதிக்க ஆரம்பித்தவர் நம் asaram bapu தான். இதில் அக்னி சார் க்ரியா மாஸ்டர் பீஸ். இதை செய்தால் உலகமே வசப்படும் என்கிற ரீதியில் பல கட்டுரைகள், வீடியோக்கள் இருக்கின்றன. பார்த்து படித்து மகிழுங்கள்.
அரசியல்வாதிகள் ஃபர்ஸ்ட்
வெறும் ஐந்து சிஷ்யர்களோடு, யோகா, க்ரியா, தியான pamplet-களோடும் தொடங்கிய ஆஸ்ரமம் படிபடியாக பக்தர்கள் கூட்டம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. இதை ஆஸ்ரமம் தொடங்கும் போதே ஸ்கெட்ச் போட்டிருந்த asaram bapu ஆஸ்ரமத்தை வளர்க்க தன்னைப் போற்றி வணங்கும் அரசியல் வாதிகளை கவனிக்கத் தொடங்கினார்.
சில சாம்பிள் அரசியல்வாதிகள்
அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, நிதின் கட்கரி, உமா பாரதி, சிவராஜ் சிங் செளஹான், ரமன் சிங், காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், கமல் நாத், மோதிலால் வோஹ்ரா... last but not least பிரதமர் நரேந்திர மோடி.
அண்டம் பிரம்மாண்ட விரிவு
1990-களில் நம் asaram bapu இந்திய அளவில் மதிக்கத் தக்க இந்து குரு, ஸாரி இந்துக் கடவுள். 1981 - 1992 கால கட்டத்தில் காங்கிரஸ் அரசியல்வாதிகள் மூலம் மொடெராவில் ஒரு 1,50,000 சதுர அடியை வளைத்துப் போட்டார். பிறகு 1995 - 1999 கால கட்டத்தில் பாஜக அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி ஒரு 2,65,000 சதுர அடியை வளைத்து போட்டார். இந்த 4,15,000 சதுர அடி மொடெராவில் வளைத்தது மட்டுமே.
400 கிளைகள்
இப்படி கட்சி பாகுபாடு இன்றி இந்தியா முழுவதற்கும் சிறிதும் பெரிதுமாக இப்போது 400 ஆஸ்ரமங்களை நிறுவினார் asaram bapu. அந்த ஆஸ்ரமங்கள் பட்டியலைக் காண: http://www.ashram.org/Ashram/Locate-Ashrams
நிலம் திருட்டு
2006-ல் பீகார் ஹிந்து அறநிலையத் துறை "கோவில் நிலங்களை asaram bapu வின் ஆஸ்ரமம் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது" என நீதிமன்றத்தில் வாதிட்டு 2009-ல் தங்கள் கோவில் நிலங்களை மீட்டுக் கொண்டது. இப்படி இந்தியா முழுக்க பரவி இருக்கும் asaram bapu வின் ஆஸ்ரமங்கள் அருகில் இருக்கும் அனாமத்து நிலங்களை எல்லாம் போலி நில ஆவணங்களை தயார் செய்து வளைத்துப் போட ஆரம்பித்தது. இன்னும் பல நிலத் திருட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.
நிர்பயா பிரச்னை
"நிர்பயா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த வந்தவர்களிடம் காலைப் பிடித்து மன்றாடி அண்ணா என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சி இருந்தால் அந்த ஆண்கள் விட்டிருப்பார்கள்" என சொன்னதில் இருந்து தான் தேசமே முதல் முறையாக (அவர் ஆஸ்ரமம் இல்லாத தென் மாநிலங்கள் உட்பட) "யார் இந்த கிறுக்கன்" என்று கவனிக்கத் தொடங்கினார்கள். பிறகு ஒரு மாதிரி "நான் சொன்னத சின்ன பிள்ளைங்க புரிஞ்சிக்காம, திரிச்சிக்கிட்டீங்க" என சப்பை கட்டினார்.
கொலை
2008-ம் ஆண்டு வாக்கில் தான் நம் asaram bapu ஜிக்கு சனி பிடிக்க ஆரம்பித்தது. asaram bapu வின் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்கள் இறந்துவிட்டார்கள். காரணம் பில்லி சூனியம் போன்ற தாந்த்ரீகங்களைப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 03 ஜூலை 2008-ல் குருகுலத்தில் இருந்து மீண்டும் இரண்டு மாணவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அடுத்த சில வாரங்களில் காணாமல் போன குழந்தைகளின் இரண்டு உடல்கள் ஆஸ்ரமத்துக்கு அருகில் கிடைத்தது. தாந்த்ரீகத்துக்கு எங்கள் பிள்ளைகளை பலி கொடுத்துவிட்டார் asaram bapu என்று போலீஸிடம் புகார் தெரிவித்தார்கள் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள்.
ஆவிங்கள ஓட்டுனே
ஆகஸ்ட் 2013, 16 வயதுப் பெண் ஒருவர் "asaram bapu என் மேல இருக்குற பேய ஓட்டுறேன்னு சொல்லி பாலியல் தொல்லை கொடுத்கிறார்" என புகார் அளித்தாள். பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் புகாரை உறுதிப்படுத்தினார்கள். பற்றிக் கொண்டது தீ. இந்தியப் பாராளுமன்றம் வரை விஷயம் சென்று, asaram bapu மீது நடவடிக்கை எடுப்பதாக அன்றைய ஆளுங்கட்சி காங்கிரஸ் ஒப்புக் கொண்டது.
அது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி
சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் "எங்கள asaram bapu வும், அவரோட பையணும் மாத்தி மாத்தி எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாங்க. அக்காவை அஸ்ரம் பாபு 1997 - 2006 வரை பல முறை மொடெரா ஆஸ்ரமத்துல வெச்சி பால் உறவு கொண்டார். தங்கையை asaram bapu வோட மகன் நாராயண் சாய் 2002 - 2005 வரை பல முறை சூரத் ஆஸ்ரமத்துல வெச்சி பால் உறவு கொண்டாரு" என புகார் தெரிவித்தனர். asaram bapu மீதான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
எனக்கு விரைப்புத் தன்மையா...?
16 வயதுப் பெண் கொடுத்த வாக்குமூலம் பொய். எனக்கு ஆண்களுக்கான விரைப்புத் தன்மையே கிடையாது என சத்தியம் செய்தார் asaram bapu. மருத்துவ பரிசோதனை முடிவுகள் "இவருக்கு விரைப்புத் தன்மை உண்டு" எனச் சொன்னது. ஐபிசி 342, 376, 506, 509 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு POCSO சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தண்டனை விதித்த ஜோத்பூர்
ஜோத்பூர் நீதிமன்றத்திலேயே வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, 12 முறைக்கு மேல் விண்ணப்பித்த ஜாமின் மனு நீதிமன்றங்களால் நிராகரிகப்பட்டது. 25 ஏப்ரல் 2018-ல் அஸ்ரம் பாபு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஐந்து லட்சம் அபராதத்துடன் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அஸ்ரம் பாபு தரப்பினர் விண்ணப்பித்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் அபராதம்
மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காதலால், உச்ச நீதிமன்றத்தில் போலி மருத்துவ சான்றுகளைக் கொடுத்து உடல் நலம் சரியில்லை என ஜாமின் விண்ணப்பித்தார். போலிச் சான்றுகளைக் கண்டுபிடித்த உச்ச நீதிமன்றம் asaram bapu-க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து கண்டித்தது.
வரி எய்ப்பு
2016-ல் asaram bapu வின் ஆஸ்ரமங்களை சோதனை செய்து 2,300 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி என்று கணக்கில் வராத சொத்துக்களை வெளிக் கொண்டு வந்தது வருமான வரித் துறை.
அதோடு அர்ஜூன் நவ நிர்மான் மற்றும் வி.ஆர்.வி இன்வெஸ்மெண்ட்ஸ் என்ற பெயரில் asaram bapu பினாமி நிறுவனங்களை நடத்தி, அந்த் நிறுவனங்கள் பெயரிலேயே 49 வீடு மற்றும் கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் இடங்கள் வாங்கப்பட்டிருப்பது, தெரிய வந்தது. இந்த 49 இடங்களில் இருந்து ஆண்டுக்கு 100
கோடி ரூபாய் வரை வாடகைப் பணம் வருகிறதாம். இப்போது 400 ஆஸ்ரமங்கள், அதன் நிலங்கள், வரும் டொனேஷன் பணம், கணக்கில் காட்டாத கறுப்புப் பணம் எல்லாம் சேர்த்து சுமார் 10,000 கோடியாவது இருக்கும் என ஜோத்பூர் போலீஸ் உறுதி செய்திருக்கிறது.
என்ன எதிர்த்து சாட்சியா... சாவுடா
23-05-2014-ல் asaram bapu வின் முன்னால் ஆஸ்ரமவாசி அம்ருத் ப்ரஜாபதி, ஆஸ்ரமத்தில் நடந்த தவறுகளை நீதிமன்றத்தில் சொல்ல முன் வந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டார். 11-01-2015-ல் அகில் குப்தா எனும் முன்னாள் ஆஸ்ரம சேவகரும்ம் சாட்சி சொல்ல சென்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதா பதக், க்ரிபால் சிங், மஹிந்திரா சாவ்லா, ராகுல் சச்சன் என்று பல சாட்சியங்களை கொன்றார்கள் அல்லது கடுமையாக தாக்கி கை கால்களை உடைத்து சாட்சி சொல்லக் கூடாது என மிரட்டினார்கள்.
நீதிபதியையே மிரட்டிய அஸ்ரம்
அஸ்ரம் பாபுவின் வழக்கை விசாரித்த மனோஜ் குமார் வியாஸ் என்கிற நீதிபதியிடம் "சார், நீங்க மட்டும் குருஜிக்கு ஜாமீன் கொடுக்காம இருந்து பாருங்க, உங்க கொலை கேஸ விசாரிக்க இன்னொரு நீதிபதி வருவாங்க" என்று வெளிப்படையாக அஸ்ரம் பாபுவின் ஆட்கள் மிரட்டி இருக்கிறார்கள். நீதிபதிக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்த காவலர்களையும் அஸ்ரம் பாபுவின் ஆட்கள் மிரட்டி இருக்கிறார்கள்.
இப்புடி ஒருத்தன், 6 கொலை பண்ணுறான், 16 வயசுப் பொண்ண வற்புறுத்தி செக்ஸ் வெச்சுக்குறான், அவன் சொத்து மதிப்பு 10,000 கோடி ரூபாய் இருக்குன்னு காவல் துறை சொல்லுது, மாசம் பொறந்தா 10 கோடி ரூபாய் வாடகைப் பணம் வந்துடுமாம்... நீங்க என்ன வேலை பாக்குறீங்கன்னு கேட்டா... "நான் உலகைத் துறந்த சுவாமி" ங்குறார். இப்ப சொல்லுங்க சார். இவர ஜெயில்ல இருந்து வெளிய விடலாமா...?