இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் வர்த்தகத்திற்காகக் குழாயடி சண்டை போட்டாலும், புதிதாக நிறுவனத்தில் சேர்வோருக்கான சம்பளத்தை எந்தப் போட்டியும் இல்லாமல் ஒற்றுமையாக 20,000 முதல் 25,000 என்ற அளவிலேயே வைத்திருக்கிறது.
இந்நிலையில் முதல் முறையாக விப்ரோ நிறுவனம் தனது நிறுவனத்தில் சேரும் பிரெஷ்ஷர்களுக்கான சம்பளத்தை 3.2 லட்சத்தில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் இனி விப்ரோ நிறுவனத்தில் சேர்வோருக்கு code test என்ற புதிய தேர்வையும் வைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் புதிய பணியார்களின் திறன் மேம்படும்.
அனைத்திற்கும் தாண்டி இந்த வருடம் கூடுதலாக 25-30 சதவீதம் அதிக ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது விப்ரோ.
விப்ரோ நிறுவனத்தில் 3 சம்பள தரத்தின் கீழ் புதிய ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
ஐஐடி, என்ஐடி போன்ற முன்னணி கல்லூரியில் இருந்து வருவோருக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமும், டர்போ திட்டத்தின் கீழ் சேர்வோருக்கு 6.5-7 லட்சம் ரூபாய் சம்பளமும், மற்ற பிரிவுகளுக்கு 3.2 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது.