உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத ஒரு வழக்கம் இந்தியாவில் உள்ளது. நம்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கு இருக்கும் முக்கியமான முதலீட்டு அல்லது சேமிப்புத் திட்டம் என்றால் அது தங்கம் தான், குறைந்தபட்சம் ஒரு குண்டுமணி அளவிலான தங்கமாவது பெரும்பாலான வீடுகளில் இருப்பதிற்கு இதுதான் காரணம்.
இப்படி இந்திய மக்கள் அனைவரும் தங்கத்தை மிகப்பெரிய முதலீடாகப் பார்க்கும் நிலையில், சனிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 6 வருட உயர்வை அடைந்துள்ளது. இந்தச் செய்தி சமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தீபாவளி
இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி வர உள்ள காரணத்தால், மக்கள் மத்தியில் தங்கத்தின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகத் தங்கம் இறக்குமதி அளவு அதிகரித்து வருகிறது. தற்போது ரூபாய் மதிப்பு மோசமாக உள்ள நிலையில் இதன் பாதிப்புத் தற்போது தங்கத்தின் மீதும் எதிரொலித்துள்ளது.
சனிக்கிழமை விலை நிலவரம்
இந்நிலையில் சனிக்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 32,625 ரூபாய் என்ற உக்கட்ட நிலையை அடைந்துள்ளது. வர்த்தக முடிவில் இதன் விலை 32,550 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
இதேபோல் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இன்றைய வர்த்தகத்தில் 1 கிலோ வெள்ளி விலை 39,600 ரூபாயாக உயர்ந்துள்ளது
சர்வதேச சந்தை நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,227.50 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 1,233.80 டாலராக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 14.76 டாலருக்கு விற்கப்படுகிறது.