பல வருடங்களாகச் சில நிறுவனங்களின் கைகளில் மட்டும் டெலிகாம் சந்தை இருந்த காரணத்தால் மக்களிடம் அதிகமான கட்டணத்தை வசூலித்து லாபத்திலும் வருவாயிலும் செழிப்பாக இருந்தது, ஆனால் இவை அனைத்தும் வலிமையான புதிய போட்டியாளர் வந்த பின்பு முழுமையாக மாறியது. ஆம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ வந்த பின்பு டெலிகாம் சந்தை முழுவதும் தலைகீழாக மாறியது குறிப்பிடத்தக்கது.
ஜியோ
ஜியோ உடன் போட்டி போடுவதற்காகவும், வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஓரே நோக்கத்தடன் ஜியோவின் சக போட்டி நிறுவனங்கள் ஜியோவிற்கு இணையாக விலையைக் குறைந்தது.
டெலிகாம் சந்தை
தற்போது டெலிகாம் சந்தையே ஜியோ செல்லும் பாதையில் தான் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. சமீபத்தில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே பல டிஜிட்டல் சேவைகளை வழங்கிய நிலையில், இதே முறையை ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகியவை பின்பற்றியது. சில வாரங்களுக்குச் செயற்கை நுண்ணறிவை ஜியோ பயன்படுத்துவதால் ஏர்டெல்லும் இதனைப் பயன்படுத்தத் துவங்கியது.
5ஜி
இந்த முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முன்னணி வல்லரசு மற்றும் தொழில்நுட்பம் மேம்பட்ட நாடுகளில் பயன்படுத்தி வரும் 5ஜி தொழில்நுட்பத்தை ஜியோ அடுத்தச் சில வருடங்களில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
இந்தியன் மொபைல் காங்கிரஸ் கூட்டம்
சமீபத்தில் நடந்த இந்தியன் மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் மேத்யூ ஓமென் பேசுகையில், 2021ஆம் ஆண்டுக்குள் தனது நெட்வொர்க் முழுவதையும் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கு ஏற்றார்போல் மாற்றப்போவதாகவும், மலிவு விலையில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவிகளைச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருவதில் முழு வேகத்தில் பணியாற்ற துவங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.
இது சக போட்டி நிறுவனங்களுக்குக் கூடுதல் சுமையை உருவாக்கியுள்ளது.