தமிழ் நாட்டுல ஒரு கிழவன் சாவுற வரைக்கும் கத்திக்கிட்டே இருந்தாரு. பொண்ணுங்க நல்லா படிங்க, நல்ல வேலைக்கு போங்க, உங்க கனவுகள நீங்களே காணுங்க, சக மனிஷியா வாழுங்க, பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்குங்க, பிடிக்கலையா ரெண்டு பேரும் மனம் உவந்து விவாகரத்து செய்ங்க, உங்கள எதிர்க்குற கட்டமைக்கப்பட்ட கடவுளோ, கடவுளின் பெயரால கட்டமைக்கப்பட்ட மதத்தையோ தூக்கி எரிங்க-ன்னு ஒரு மனிஷன் தொடர்ந்து பேசுனார். விளைவு... இன்னக்கி பெண் சுதந்திரத்துல தமிழகம் முன்னோடி. ஆனா பெரியார் ராஜஸ்தான்ல (rajasthan) பிறக்கலயா அந்த 22 வயசுப் பொண்ண விஷம் குடிக்க வெச்சுட்டாங்கய்யா... சாவ பக்கத்துல இருந்து பாத்துருச்சுங்கய்யா... திவ்யா.
திவ்யா
துரு துரு பெண். கலந்துக் கிட்ட எல்லா விஷயத்துலயும், ஒரு தடம் பதிக்கிற குணம். ராஜஸ்தான்ல ஒரு குக் கிராமத்துல இருந்து "பொட்ட புள்ளக்கு என்ன ம*த்துக்கு பள்ளிக் கூடம்" என்கிற வார்த்தைகளை தினமும் கேட்டு கேட்டு பள்ளிக் கல்வி முடித்தவர்.
கல்லூரி
"அப்பா நான் மேற்கொண்டு படிக்கணும்" என்கிற வார்த்தைகளை உண்மையாக்க ஆசை தான்... ஆனால் சாதிய ஆதிக்கம் திவ்யா செளதரியின் மொத்த குடும்பத்தையும் (அவர்கள் விருப்பத்தோடு அல்லது விருப்பம் இல்லாமலோ) கட்டுப்படுத்தியது. இருந்தாலும் அப்பாவின் ஆசியோடு கல்லூரிக்கு போகாமல் பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) படிப்பைப் படிக்கத் தொடங்கினார். அதற்கு அப்பாவும் ஊரில் எவருக்கு அதிகம் தெரியாத படி பார்த்துக் கொண்டார்.
Chartered Accountant
இந்த படிப்பைப் பற்றி நாலு வேளையும் பீட்ஸா பர்கர் சாப்பிடும் மேல் தட்டு நகர வாசிகளைக் கேட்டால் கூட "ரொம்ப கஷ்டம்" என்பதை விவாதிக்காமல் ஒப்புக் கொள்வார்கள். அவ்வளவு கடினமான தேர்வைக் கூட அசால்டாக அடுத்த நான்கு வருடத்தில் ராஜஸ்தானில் அந்த சாதிய ஒடுக்குமுறைகள் தலை விரித்தாடும் இடத்தில் இருந்த படியே படித்து முடித்தார் திவ்யா.
வேலை
படிப்பு ஓகே. இப்போது ஒரு நல்ல வேலைக்கு போக பல சர்வதேச நிறுவனங்களுக்கு இண்டர்வியூ சென்று கொண்டு இருந்தாள். இந்த நேரத்தில் தான் திவ்யா மூன்று வயது இருந்த போதே நிச்சயம் செய்த ஜீவராஜ் உடன் திருமணம் செய்ய ஜீவராஜின் குடும்பம் பேச்சு எடுத்தது. பேச்சு படிப் படியாக செயல் ஆவதைக் கண்டு பயந்த திவ்யா தன் மறுப்பை வெளிப்படையாக தெரிவித்தார்.
பால்ய விவாஹம்
இந்த நேரத்தில் தான் திவ்யா மூன்று வயது இருந்த போதே, தன் சக கிராமவாசியை பால்ய திருமணத்துக்கு நிச்சயம் செய்தார்கள். அந்த மிருகத்தின் பெயர் ஜீவராஜ். இப்போது திவ்யா படித்து முடித்து விட்டாள். இப்போது திவ்யாவை ஜீவராஜ் உடன் திருமணம் செய்ய ஜீவராஜின் குடும்பம் பேச்சு எடுத்தது. பேச்சு படிப் படியாக செயல் ஆவதைக் கண்டு பயந்த திவ்யா தன் மறுப்பை வெளிப்படையாக பயந்த படி தெரிவித்தார்.
நஷ்ட ஈடு
ஜீவராஜ் குடும்பத்தினர் பஞ்சாயத்தைக் கூட்டினர். "ஜீவராஜ் குடும்பத்துக்கு 16 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகக் கொடுக்கணும்" இது தான் தண்டனை. கோவப்பட்ட திவ்யா காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். சரி மா பாக்கலாம்... இது தான் காவலர்களிடம் இருந்து வந்த பதில். இதுக்கு தான் பொட்ட புள்ளக்கி படிப்பு எல்லாம் கொடுக்கக் கூடாது. இப்ப பாரு படிச்சி சம்பாதிக்கிற திமிரு இன்னக்கு பெரியவங்க பாத்த பையன் வேணாம்ன்னு சொல்ல வெக்கிது. அதான்யா படிக்க வெச்சா இப்படித் தான் படுக்கறத்துக்கு அவன் வேணாம்... இவன் வேணாம்-ன்னு சொல்ல வெக்கிது. இவங்களுக்கு இந்த தண்டனை தேவை தான் என ஊர் மக்களும் திவ்யா குடும்பத்தினரை கேலி பேசினர். ஆனால் திவ்யாவை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
போலீஸ் கிட்ட போரியா...?
திவ்யா காவலர்களிடம் புகார் கொடுத்த விஷயம் வெளியே தெரிய வந்தது மீண்டும் ஜீவராஜ் குடும்பம் பஞ்சாயத்தைக் கூட்டியது. "ஏற்கனவே கொடுக்க வேண்டிய 16 லட்சத்தோடு மேற்கொண்டு ஒரு 20 லட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 36 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். காவல் நிலையப் புகார்களை திவ்யா குடும்பம் திரும்பப் பெற வேண்டும். பஞ்சாயத்தில் எல்லார் காலத் தொட்டு திவ்யா குடும்பம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லலை என்றால் திவ்யா குடும்பத்தை மொத்த சாதி சனத்த விட்டு நிரந்தரமாக ஒதுக்கி வவைத்துவிடுவோம்" இது தான் அந்த மானங்கெட்ட பஞ்சாயத்தின் தீர்ப்பு.
மன முடைந்த திவ்யா
"உனக்காக எல்லாம் ஏத்துக்கிட்டேன்... ஆனா என்னோட சனங்கள மீறி என்னால வெளிய வர முடியாதும்மா... என்னோட பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது எல்லாமே இந்த மண்ணுல இந்த மனிஷங்க தான் பண்ணனும்மா... இப்ப என்ன பண்றதுன்னு நீயே சொல்லுமா" என்று திவ்யாவின் தந்தை மகளிடம் கதற மனம் உடைந்து விஷத்தைக் குடித்துவிட்டு காவல் நிலையம் சென்று மீண்டும் நடந்தவைகளை விவரித்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டால்.
மருத்துவமனையில் அனுமதி
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு பாதிப்பு இல்லாமல் ஓய்வில் இருக்கிறார். இப்போது தான் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஜீவராஜ் குடும்பத்தின் மீது FIR பதிந்து இருக்கிறார்கள். வழக்கம் போல காவல் துறையிடம் இதைப் பற்றிக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் பசப்புகிறார்கள்.
இத்தனை போராட்டமா..?
இதைத் தான் அன்றே பெரியார் சொன்னார். ஒரு முதலாளியிடம் இருந்து ஒரு தொழிலாளிக்கு விடுதலை கிடைத்தாலும் கிடைக்கும், ஒரு பெண்ணுக்கு ஆணிடம் இருந்து விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்று. அது உண்மையாகத் தான் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை ஒரு கிராமத்துப் பெண் சுதந்திரமாக படிக்க முடியவில்லை. சுதந்திரமாக தன் வாழ்கைத் துணையைத் தேர்வு செய்ய முடியவில்லை. சுதந்திரமாக தனக்கு விருப்பமில்லாததைச் சொல்ல முடியவில்லை... ஆனால் நாம் சுதந்திர நாட்டில் இருக்கிறோமாம். கட்டமைக்கப்பட்ட கடவுளே அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.