நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல் வங்கி 2018 - 19 நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 4,532 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. சந்தையில் பஞ்சாப் நேஷனல் பேங்குக்கு கணித்த தொகயை விட இது மூன்று மடங்கு அதிக நஷ்டம். எனவே திங்கட்கிழமை சந்தையில் உடனடியாக இந்த செய்திக்கான எதிரொலியை பார்க்கலாம்.
கணித்த நஷ்டம்
இந்த செப்டம்பர் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 1,349.2 கோடி நிகர நஷ்டம் அடையலாம் எனப் பல்வேறு அனாலிஸ்ட்டுகள் கணித்திருந்தனர். ஆனால், அனாலிஸ்ட்டுகள் கணித்ததை விடமூன்று மடங்கு அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளது.
முந்தைய காலாண்டுகள்
இதற்கு முந்தைய ஜூன் காலாண்டில் நிகர நஷ்டம் ரூ. 940 கோடியாக இருந்தது. 2017 - 18 நிதி ஆண்டின் செப்டம்பர் மாத காலாண்டில் இந்த வங்கி ரூ. 560 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாராக் கடன்
வாராக் கடனால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட செப்டம்பர் காலாண்டில் ரூ. 7,733 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஜூன் காலாண்டில் ரூ. 4,982 கோடியாகவும், சென்ற நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 2,964 கோடியாகவும் இருந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் செப்டம்பர் காலாண்டில் 17.16 சதவீதமாக உள்ளது.
செயல்பாட்டு லாபம் காலி
வங்கியின் செயல்பாட்டு லாபம் உட்பட பிற ஆதாரங்களிலிருந்து பணத்தைப் பயன்படுத்துவது அதிகரித்ததால் வங்கியின் நிகர நஷ்டம் அதிகரித்துள்ளதாக வங்கி மேல் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி மற்ற ஆதாரங்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட மொத்த தொகை இந்த செப்டம்பர் காலாண்டில் ரூ. 9,757 கோடி. இது முந்தைய ஜூன் காலாண்டில் ரூ. 5,758 கோடியாகவும், சென்ற நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 2,440 கோடியாகவும் இருந்துள்ளது.