இந்திய அரசு 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றவர்கள் மற்றும் போரின் போது பிரிந்து சென்றவர்களின் இந்திய சொத்துக்களை எதிர் சொத்துக்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். அப்படி சென்றவர்களிடம் இருந்து பங்கு சந்தை முதலீடுகளை எதிரி பங்குகள் என குறிப்பிடுகின்றனர்.
எதிரி சொத்து என்றால் என்ன?
இப்படி சுதந்திரத்தின் போது பிரிந்து சென்றவர்கள் மற்றும் சீன போரின் போது பிரிந்து சென்றவர்களின் சொத்துக்களை எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் கீழ் நிர்வாகம் செய்வதற்காக, 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இந்திய அரசால் எதிரி சொத்து சட்டம், 1968ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துக்களைப் பராமரிக்க, இந்திய அரசு சில முகவர்களைப் பாதுகாவலர்களாக நியமித்தது.
சட்ட திருத்தம்
1968ஆம் ஆண்டின் எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களுடன் 7 ஜனவரி 2016 அன்று மோடி தலைமையிலான இந்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர் திருத்தப்பட்ட எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம், மார்ச் 8, 2016 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது. இதன்படி பாகிஸ்தான் மற்றும் சீனாவில் குடியேறிவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய இயலாது. எதிரி சொத்துகளை இப்போதும் பராமரித்து வருபவர்கள் அது தனிநபராக இருந்தாலும் அல்லது அரசுத் துறையாக இருந்தாலும், அவர்களே அந்தச் சொத்துகளை வைத்துக் கொள்ள முடியும் என்பதே இச்சட்டத் திருத்த முன்வடிவத்தின் சிறப்பு அம்சமாகும்.
எதிரி பங்குகள் விற்பனை
இப்படி பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு குடியேறியவர்களிடம் பங்கு சந்தை முதலீடுகளும் இருந்தன. அவை தற்போது செபி கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்வாறு 996 நிறுவனங்களில் 20,323 பங்குதாரர்கள் வைத்திருந்த பங்குகள் எதிரி பங்குகள் என அறிவித்து அவற்றை விற்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இதன் மூலம் கிடைக்கும் நிதியைத் தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய அரசு திட்டங்களுக்கான நிதியாகப் பயன்படுத்த உள்ளனர். இதனால் அரசு இருந்து வந்த பண பற்றாக்குறையும் சற்று குறையும் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு நிதி கிடைக்கும்?
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவினால் எதிரி பங்குகளை விற்பதன் மூலம் 3,000 கோடி ரூபாய் வரை நிதி கிடைக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.