மோடிஜியின் செல்லப் பிள்ளையான GST எனும் சரக்கு மற்றும் சேவை வரி தன் வேலைகளை காட்டத் தொடங்கி இருக்கிறது. GST நடைமுறையில் கொண்டு வந்த பின் மாநில அரசின் வரி வருவாய்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு நஷ்ட ஈட்டுத் தொகையாக தர வேண்டும். அதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டது. இப்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை சரியத் தொடங்கி இருக்கிறது. 2018 ஜூன் ஜூலை மாதங்களில் வழங்கிய GST நஷ்ட ஈட்டுத் தொகையை விட, 2018 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் குறைந்துள்ளது.
பகிர்வு
GST நடைமுறையில் வரி வருவாயை மத்திய அரசும்,மாநில அரசுகளும் பகிர்ந்துகொண்டு வருகின்றன. இதில் வரி வருவாய் இழப்பைச் சந்திக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடுகளை வழங்கிவருகிறது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையானது ரூ.3,899 கோடியாக இருந்தது.
கடந்த காலம்
2018 ஜூன்-ஜூலை மாதங்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை ரூ.14,930 கோடியாக உயர்ந்தது. இது 2017 ஜூன் ஜூலை காலத்தில் வழங்கிய 3899 கோடி நஷ்ட ஈட்டுத் தொகையை விட சுமார் நான்கு மடங்கு உயர்வு. சரி இனி மாநிலங்களுக்கு நல்ல வருவாய் மத்தியின் GST நஷ்ட ஈட்டில் இருந்து வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாநிலங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 2018 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் மத்திய அரசு வெறும் ரூ.11,900 கோடியை மட்டும் வழங்கி கடையை சாத்திவிட்டது.
எங்களுக்கு ஜாலி தான்
மிசோரம், அருணாசல் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்கள் மட்டுமே இந்த நிதி ஆண்டில் அதிக GST நஷ்ட ஈட்டைப் பெற்றன. மற்ற 25 மாநிலங்களும் வரி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.
மத்திய அரசு வசூல்
மத்திய அரசு 2018 அக்டோபரில் மட்டும் 1,00,710 கோடி ரூபாயை வசூலித்தது. இதுவரை GST திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து வசூலான அதைகபட்ச தொகையே இது தான்.
நஷ்டம்
பாண்டிச்சேரி 42%, பஞ்சாப் 36%, ஹிமாச்சல் பிரதேசம் 36%, உத்தராகண்ட் 35%, ஜம்மு காஷ்மீர் 28%,சட்டிஸ்கர் 26%, கோவா 25%,ஒடிசா 24%, கர்நாடகா 20%, பீகார் 20 சதவீதம் என GST நஷ்ட ஈட்டுத் தொகையில் இழப்பு கண்டுள்ளன.
சராசரி
இந்த மாநிலங்கள்ஜூலை 2017 முதல் மார்ச் 2018 வரைசராசரியாக 16 சதவீத GST நஷ்ட ஈட்டுத் தொகையில் (மாநில வரி வருவாயில்) இழப்பைச் சந்தித்தன. இது 2018 ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 13 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதைப் பாருங்கள் என பாஜகவினர் கோஷம் எழுப்புகின்றனர்.
மோடிஜி எங்களுக்கு வருவாய் பத்தல, எதாவது செய்யுங்க என்று மாநிலங்கள் கதறிக் கொண்டிருக்கும் போது கங்கை நதியில் கப்பல் விட வாரணாசி சென்றிருக்கிறார் நம் பிரதமர் மோடி.