பணதட்டுப்பாட்டில் சிக்கியுள்ள ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துடன் டாடா குழுமம் இணைவதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில வாரங்களாகவே டாடா குழுமம் ஜெட்ஏர்வேஸ் பங்குகளை வாங்கும் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அதன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் தலைவரான என் சந்திரசேகரனும் வியாழக்கிழமையே ஜெட் ஏர்வேஸ் உடனான இணைவு குறித்துப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளதை உறுதி செய்துள்ளார். இதனால் ஜெட்ஏர்வேஸ் நிறுவனரான நரேஷ் கோயல் நிம்மதி அடைந்துள்ளார்.
டாடா குழுமம் - விமான வணிகம்
டாடா குழுமத்திற்கு ஏற்கனவே ஏர்ஏசியா இந்தியாவில் 51 சதவீத பங்குகளும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளையும் உள்ளது. தற்போது ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைவது இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
எத்தியாட்
எத்தியாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஜெட்ஏர்வேஸில் 24 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில் அதில் இருந்து கடந்த ஒரு ஆண்டாகவே எத்தியாட் வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இப்போது டாடா குழுமம் எத்திட் நிறுவனத்திற்கு ஜெட்ஏர்வேஸில் உள்ள பங்குகளை வாங்க உள்ளதா அல்லது எத்தியாட் தொடர்ந்து இணைந்து செயல்பட உள்ளதா என்ற விவரங்கள் தெரியவில்லை.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திடம் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கேட்க முயன்ற போது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அது கருத்து தற்போதைக்குக் கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
பங்குகள்
ஜெட் ஏர்வேஸ் மற்றும் டாடா குழுமம் இணைவது உறுதியாகி வரும் நிலையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் வியாழக்கிழமை 63.20 புள்ளிகள் என 24.52 சதவீதம் உயர்ந்து 320.95 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.