பெங்களூரு: ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் Xs, Xs மேக்ஸ் மற்றும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் Xr மாடல் போன்களின் உற்பத்தியினைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதியதாக ஒரு ஐபோனை அறிமுகம் செய்கிறது என்றால் அதற்கு எப்போதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். ஆனால் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தப் போன்கள் அதிகளவில் விற்பனை ஆகாததால் நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே உற்பத்தியைக் குறைப்பது தான் ஒரே வழி என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கிறிஸ்துமஸ் காலாண்டு
கிறிஸ்துமஸ் காலாண்டு நடைபெற்று வரும் நிலையில் சென்ற ஆண்டினை விட இந்த ஆண்டு விற்பனை குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
விலை குறையுமா?
உற்பத்தியைக் குறைக்கும் அதே நேரம் விற்பனையினை எப்படி அதிகரிப்பது என்பது குறித்தும் அப்பிள் நிறுவன அதிகாரிகள் விவாதித்து வருகிறனர். இதனால் வரும் நாட்களில் அப்பிள் மொபைல் போன்களின் விலை குறைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கின்றனர்.
அப்பிள் நிறுவனத்தினை இது குறித்துத் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஐபோன் Xs விலை நிலவரம்
இந்தியாவில் ஐபோன் Xs, Xs மேக்ஸ் மற்றும் Xr மாடல்கள் அதிகபட்சம் 1,44,900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.