ஒரு பொருளை வாங்குபவர், தன்னால் முடிந்த வரை பொருளின் விலை குறைத்து வாங்கச் முயல்வார். அதே போல ஒரு பொருளை விற்பவர், தன்னால் முடிந்த வரை அதிக விலைக்கு அந்த பொருளை விற்க முயல்வார். ஆனால் reliance ஒரு பொருளை தானே உற்பத்தி செய்து, தானே அதற்கு அதிக விலைக்கு வாங்கி அரசுக்கு லாபம் சேர்த்திருக்கிறதாம். வேடிக்கையாக இல்லை.
அம்பானி பிரதர்ஸ்
ரஃபேல் விமான ஊழலில் தம்பி அனில் அம்பானி மோடியுடன் கலக்கிக் கொண்டிருக்க... அண்ணன் மட்டும் என்ன விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாரா...? இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ஒரு மீத்தேன் எரிவாயு திட்ட முறைகேட்டில் சிக்கி இருக்கிறார்.
2ஜிக்கு ஒத்த வழக்கு
இதுவும் 2ஜி வழக்கைப் போலத் தான். ஒழுங்காக ஏலம் விட்டு இருந்தால் இவ்வளவு லாபம் பார்த்திருக்கலாம். முறைகேடாக விற்று அரசுக்கு வர வேண்டிய லாபத்தை குறைத்து அத்தனையையும் ரிலையன்ஸே எடுத்துக் கொண்டது என்பது தான் பிரச்னை. இதில் வேடிக்கை என்ன என்றால் மேலே சொன்னது போல எரிவாயுவை எடுத்தது, விற்றது, வாங்கியது எல்லாமே ரிலையன்ஸ் மட்டுமே. அதாவது இவர்களே எடுத்து, அதிக விலைக்கு இவர்களுக்கே விற்றுக் கொள்வார்களாம். கொஞ்சம் குழப்புகிறதா...? விரிவாகப் பார்ப்போம்.
Coal Bed Methane - CBM
நிலக்கரியில் சுமாராக 90 - 95 சதவிகிதம் மீத்தேன் வாயு நிறைந்து இருக்கும். அந்த மீத்தேனை மட்டும் பூமிக்கடியில் இருந்து எடுப்பது தான் இந்த Coal Bed Methane - CBM திட்டம். இதை coalbed gas, coal seam gas (CSG), or coal-mine methane (CMM) என்றும் அழைப்பார்கள். பொதுவாக மீத்தேனை இயற்கை எரிவாயு என்றும் அழைப்பார்கள்.
கரி வகை
பூமிக்கடியில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி என்று இரண்டு ரகம் உண்டு. ஆங்கிலத்தில் நிலக்கரியைத் Coal என்று அழைப்போம். பழுப்பு நிலக்கரியை Lignite என்று அழைப்போம். நெய்வேலியில் இருக்கிறதே அது பழுப்பு நிலக்கரி. தற்போது நிலக்கரியில் இருந்து மட்டுமே மீத்தேனை பிரித்தெடுக்கிறார்களாம்.
கொஞ்சம் தரவுகள்
இந்தியாவில் 92 ட்ரில்லியன் க்யூபிக் அடிக்கு இந்த இயற்கை எரிவாயு கொட்டிக் கிடக்கிறதாம். உலகிலேயே இயற்கை எரிவாயு அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம். இதில் 62.4 ட்ரில்லியன் க்யூபிக் அடி இயற்கை எரிவாயு இந்தியாவின் 33 இடங்களில் தேங்கி இருக்கின்றன.
இதுவரை
2000-ம் ஆண்டு வரை இந்தியாவில் இயற்கை எரிவாயு எடுத்து விநியோகிக்கும் வியாபாரத்தில் Great Eastern Energy Corp. Ltd (GEECL) மற்றும் Essar Oil Ltd ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கோலொச்சி இருந்தன. 2001-ல் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தில் இணைந்து சில எரிவாயு பகுதிகளையும் தன்னகப்படுத்திக் கொண்டது ரிலையன்ஸ். இது எல்லாம் த்ருபாய் அம்பானி உயிருடன் இருக்கும் போதே நடைபெற்றது.
யாருக்கு கான்டிராக்ட்
அந்த இயற்கை எரிவாயு வளமுள்ள 33 இடங்களை ரிலையன்ஸ், எஸ்ஸார், ஓஎன்ஜிசி, க்ரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி (தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த வந்த நிறுவனம்) ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு கொடுத்தது அரசு.
உற்பத்தி தொடக்கம்
ஓஎன்ஜிசி இதில் சேத்தி இல்லாமல் தன் பாட்டுக்கு உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. ஒதுக்கப்பட்ட 33 இடங்களில், வெறும் நான்கு இடங்களில் மட்டுமே உற்பத்தியைத் தொடங்கி இருந்தது கார்ப்பரேட் நிறுவனங்கள். காரணம் உற்பத்தி செய்த இயற்கை எரிவாயுவை விற்பதில் உள்ள விதிகள் மற்றும் அதனால் ஏற்படும் நஷ்டம் காரணமாக உற்பத்தியை பரவலாகத் தொடங்க வில்லை.
முறையீடு
"நாங்கள் இந்த இயற்கை எரிவாயு எடுக்கும் பணிக்காக நிறைய செலவழிக்க வேண்டி இருக்கிறது. அத்தனை பெரிய முதலீடுகளை செய்த பின்னும் அரசு சொல்லும் விலைக்கு இயற்கை எரிவாயுவை விற்றால் எங்களுக்கு கையில் லாபம் இல்லை" என ரிலையன்ஸ், எஸார் மற்றும் க்ரேட் ஈஸ்டர்ன் முறையிட்டார்கள்.
தீர்வு
"அமெரிக்கா, ரஷ்யா, கனடா போன்ற எரிசக்தி மிகை நாடுகளில் ஒரு mBtc (million British thermal unit) இயற்கை எரிவாயுவை 2.5 டாலருக்கு விற்கிறார்கள். இதே 2.5 டாலர் விலைக்கு இந்தியாவில் இயற்கை எரிவாயுவை விற்பதால் எங்களுக்கு நஷ்டம். எனவே எரிவாயுவை எடுக்கும் நிறுவனங்களே தங்கள் இஷ்டப்படி விலை நிர்ணயித்து விற்க அனுமதி வேண்டும்" என முறையிட்டது கார்ப்பரேட்.
அரசுக்கும் லாபம்
கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கைகளைக் கேட்ட அரசு மற்றும் ஒரு விவரத்தையும் கண்டது. அதாவது இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தால், அரசுக்கும் லாபம் அதிகரிக்கும் என்பதையும் கவனித்தது. ஆக ஒரு வழியாக கார்ப்பரேட்களின் கோரிக்கைகளை தனக்கும் லாபம் என்கிற அடிப்படையில் ஒப்புக் கொண்டது மத்திய அரசு. ஆனால் ஒரு நிபந்தனை.
Arms length price
விலையை எரிவாயு எடுக்கும் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம். ஆனால் முதலில் Arms length price முறையில் ஏலம் விட்டு விற்க வேண்டும். அப்படி விற்க முடியவில்லை என்றால் தான் Affiliated Companies-களுக்கு ஏலம் விட்டு விற்க வேண்டும் என்றது மத்திய அரசு.Arms length price முறை என்பது ஒரு முன் பின் அறிமுகம் இல்லாத நபர் ஒருவருக்கு நாம் தயாரித்த பொருட்களை விற்பது தான். உதாரணமாக: நாம் ஒரு மளிகை கடைகளுக்கோ சென்று பொருட்களை வாங்குது.
இதுவே அந்த மளிகைக் கடைக்காரர் நம் உறவினர்களாக இருந்தால் அது Arms length price முறை கிடையாது.
Affiliated Companies
ஒரு நிறுவனத்தோடு தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும் Affiliated Companies தான். உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் தான் தாய் நிறுவனம். Reliance Gas Pipeline Ltd (RGPL),Reliance petroleum, reliance retail, network 18 போன்றவைகள் இதன் துணை நிறுவனங்கள்.
ஒத்து வரவில்லை என்றால்
அப்படி சம்பந்தமில்லாத நிறுவனங்கள் நல்ல லாபகரமான விலைக்கு எரிவாயுவை வாங்க முன் வராத போது மட்டுமே, எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களுக்கு (Affiliated Copanies) தொடர்புடைய நிறுவனங்களுக்கு எரிவாயுவை விற்கலாம். Arms length price முறையில் சொன்ன விலையை விட கூடுதலான விலையை Affiliated Copanies-கள் கொடுத்தால் Affiliated Companies-களுக்கு விற்கலாம்.
நஷ்டம்
ஒருவேளை Arms length price மற்றும் Affiliated Companies என இருவருமே அரசு சொன்ன குறைந்த பட்ச விலைக்கு கூட வாங்க முன் வரவில்லை என்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டத்தை சுமக்க வேண்டும். அரசு தன் குறைந்தபட்ச விலைக்கான ராயல்டி தொகையினை எரிவாயு எடுக்கும் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும்.
அரசு வருமானக் கணிப்பு
எரிவாயு எடுக்கும் நிறுவனம் அரசுக்கு கொடுக்க வேண்டிய ராயல்டி தொகைகளை Petroleum Planning & Analysis Cell (PPAC) கணித்துச் சொல்லும். அமைச்சகம் சொல்லி இருந்த குறைந்த பட்ச விலை அல்லது விற்ற விலை, இந்த இரண்டில் எது அதிகமோ அந்த தொகையின் அடிப்படையில் அரசுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்.
தரகர் நியமனம்
நல்ல விலைக்கு ரிலையன்ஸ் நிறுவனம் எடுக்கும் இயற்கை எரிவாயுவை விற்றுக் கொடுக்க சர்வதேச அளவில் பெயர் பெற்ற Crisil நிறுவனத்தை நியமித்தது. இவர்களின் அறிக்கைகள் எல்லாம் சர்வதேச தரத்திலானவை. இவர்களின் கணிப்புகள் மற்றும் மதிப்பீடுகளை இந்திய அரசு என்ன அமெரிக்க அரசே செவி சாய்க்கும் அளவுக்கு தரமானவைகள்.
பிரச்னை ஆரம்பம்
2017 ஜூலையில் ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்த இயற்கை எரிவாயுவை ரிலையன்ஸ் நிறுவனமே வங்கிக் கொண்டது. ஒரு mBtc எரிவாயுவை 7 - 8 டாலருக்கு தனக்கு தானே விற்று வாங்கிக் கொண்டது. சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயுவை குறைந்த விலைக்கு தனக்கு தானே விற்றுக் கொண்டு லாபம் பார்த்துவிட்டது என்பது அரசு குற்றச்சாட்டு.
அரசை மதிக்காத ரிலையன்ஸ்
அரசு சொன்ன Arms length price முறையை சரியாகக் கடை பிடிக்காமலேயே ரிலையன்ஸ் இப்படி செய்திருக்கிறது என அரசு தரப்பில் பிரச்னையைக் கிளப்பி இருக்கிறார்கள்.
ஏமாற்றிய ரிலையன்ஸ்
ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் மத்திய அரசு ஒரு mBtc எரிவாயு விலையை உலக நாடுகளுக்கு ஒத்து நிர்ணயிக்கும். அது அக்டோபர் 2018-ல் இருந்து 3.5 டாலராக நிர்ணயித்திருக்கிறார்கள். அரசு கணிப்புப் படி ஒரு mBtc எரிவாயுவை 5.7 டாலரில் இருந்து 10.64 டாலருக்கு விற்கலாம் எனவும் நிர்ணயித்தது. அரசு கணிப்பதற்கு முன்பே, 2017-ல் எஸ்ஸார் நிறுவனம் தன் ஒரு mBtc எரிவாயுவை 6 டாலருக்கும், க்ரேட் ஈஸ்டர் நிறுவனம் தன் 1 mBtc எரிவாயுவை 10.07 டாலருக்கு ஒரு mBtc எரிவாயுவை விற்று அரசுக்கு வரியும் செலுத்தி இருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் தரப்பு
அரசுக்கு எந்த ஒரு வருவாய் இழப்பும் இல்லாமல் நல்ல விலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயுவை வாங்கி இருக்கிறது. Arms length price முறையில் வந்த விலையை விட 1.29 டாலர் கூடுதலாகக் கொடுத்து தான் வாங்கி இருக்கிறோம். சொல்லப் போனால் எஸ்ஸார் நிறுவனத்தின் எரிவாயு விற்ற விலையை விட நாங்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கி இருக்கிறோம். ஆக இது எப்படி விதிமீறல் ஆகும் என எதிர் வாதம் செய்து வருகிறது.
வழக்கு
Directorate General of Hydrocarbons (DGH), என்கிற இந்தியாவின் எரிவாயு நெறிமுறையாளர், ரிலையன்ஸின் இந்த விதி மீறல்களை அரசுக்கு சுட்டிக் காட்டி இருக்கிறது. Arms length price முறையில் வெளிப்படையாக ஏலம் விட்டு வியாபாரம் செய்யாமல் Crisil நிறுவனத்தை வைத்து நாடகம் ஆடி இருக்கிறது ரிலையன்ஸ். அதோடு இன்னும் லாபம் பார்த்திருக்கக் கூடிய டீலில் குறைந்த விலைக்கு, தனக்கு தானே வாங்கிக் கொண்டு அரசுக்கு சுமார் ரூ.1400 கோடி நஷ்டத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக Directorate General of Hydrocarbons (DGH) சொல்லி இருக்கிறது.
இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயுவை விற்க அளித்த உரிமத்தை ரத்த செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இப்போது அரசு இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட்டையே கிரிமினல் வளையத்தில் நிறுத்தி இருக்கிறது. அதுவும் அரசுக்கு அதிக வரிப் படி அளக்கும் ரிலையன்ஸை எதிர்த்து. இந்த விஷயத்தின் ஆரம்பத்தில் இருந்தே முகேஷ் அம்பானிக்கு ஒரு சரியான தீர்வும் பிசினஸ் லாபமும் இல்லாததால் கோபத்தில் கொப்பளிக்கிறாராம். அதோடு இந்த விவரங்களை அக்டோபர் 02, 2014-ல் பத்திரிகைகளில் எழுதியதற்காக மும்பை நீதிமன்றத்தில் Hindustan times, Livemint போன்ற பத்திரிகைகள் மீது வழக்கும் தொடுத்து நடத்தி வருகிறார் என்றால் முகேஷ் அம்பானியின் கோபம் புரியும்.