"எஃப்எம்ஜிசி நிறுவனங்களை ஓட விடுவேன்" என பாபா ராம்தேவால் சூழுரைத்துத் தொடங்கப்பட்ட நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேத். 2006-ல் பாபா ராம்தேவால் தொடங்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்துடனேயே நேரடியாக மோதும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. சரி சொன்னது போல இந்தியாவில் எஃப்எம்ஜிசி நிறுவனங்களுக்கு சங்கு ஊதிவிடுவார் போல என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் "எனக்கு 10% வருவாய் இழப்பு" என்று செய்தி சொல்கிறார் பாபா ராம்தேவ்.
ஜிஎஸ்டி குறித்து பாபா ராம்தேவ்
ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னாள் இருந்தே பாபா ராம்தேவ் ஜிஎஸ்டி வரிகளுக்கான கண்டன குருக்களை எழுப்பி வந்தார். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் நுகர்வோர் பொருட்களின் சந்தை வெகுவாக பாதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பதஞ்சலி
நுகர்வோர் பொருட்கள் வர்த்தகம் தான் பதஞ்சலி நிறுவனத்தின் அசுர பலமே. ஜிஎஸ்டி அறிமுகத்திற்குப் பிறகு அது படி படியாகச் சரியத் தொடங்கியுள்ளது.
வருவாய்
மொத்த வருவாயில் கடந்த நிதி ஆண்டை விட 10% சரிந்து ரூ.8,148 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளதாம். அதே போல 2016 -17 நிதியாண்டை விட லாபத்தில் 50% சரிந்து 528.9 கோடி ரூபாய் மட்டுமே லாபம் பார்த்துள்ளதாம். இதற்குத் தான் பாபா ராம்தேவ் வருத்தப்பட்டு இருக்கிறார்.
விற்பனை அளவு
கடந்த 2016 -17 நிதி ஆண்டில் பதஞ்சலியின் மொத்த விற்பனைத் தொகை ரூ.9,019.3 கோடி. இது 2015 -16-ல் ஆன விற்பனையான 4,383 கோடியை விட இருமடங்கு. இப்படி பெருக்கல் கணக்கில் வியாபாரத்தை விரிவாக்கிக் கொண்டிருந்த பாபாஜிக்கு திடீரென கூட்டல் கணக்கில் வியாபாரம் வளர்ந்தாலோ சரிந்தாலோ கோபம் வரத்தானே செய்யும். வரி போக நிறுவனத்தின் மொத்த லாபம் 2017-ல் 1,190.4 கோடி அதுவே 2016-ல் 772.6 கோடி.
சரிவிற்கான காரணம்
ஜிஎஸ்டி-னால் தான் பதஞ்சலியின் வளர்ச்சிப் பாதையில் கற்கள் விழுந்துவிட்டது. ஆனால் பதஞ்சலியின் கடுமையான போட்டி நிறுவங்களான எச்யூஎல் மற்றும் ஐடிசி புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஜிஎஸ்டி பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டனர். பதஞ்சலி அதில் பின் தங்கிவிட்டது என்று சந்தை அனலிஸ்டுகள் சொல்கிறார்கள்.
புதிய தொழில்நுட்பம் இல்லை
ஜிஎஸ்டி-க்கு ஏற்றவாறு பதஞ்சலி நிறுவனம் எந்த ஒரு புதிய உற்பத்தி, மார்க்கெட்டிங் மற்றும் நிர்வாக முறையைக் கையாளவில்லை. அதோடு இணக்கமான விலைப் பட்டியலையும் சரிவரத் தயார் செய்யவில்லை. இதுவே பதஞ்சலியின் சரிவிற்குக் காரணம் என ப்ளூம்பெர்க் பத்திரிகை, பதஞ்சலி நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறித்து கணித்திருக்கிறது.
விநியோகஸ்தர்கள்
பதஞ்சலி உற்பத்தி, மார்க்கெட்டிங் போன்ற நிர்வாக முறைகளில் தங்கள் சரி செய்து கொள்ளாதது ஒரு புறம் இருக்க.... பதஞ்சலி பொருட்களின் விநியோகஸ்தர்கள் புதிய வரி முறைக்கு தங்களை மாற்றிக்கொள்ளவில்லை எனப் பதஞ்சலி நிறுவனமே சொல்கிறது. அதனால் தான் நிறுவனத்தின் விற்பனை விகிதம் குறைந்துள்ளது. வல்லுநர்களின் கருத்து படி பதஞ்சலி நிறுவனம் அதன் போட்டி நிறுவங்களை போல அதிகளவில் விரிவாக்கம் செய்யவில்லை, இப்போது தான் அந்தப் பணியை முடுக்கிவிட்டுள்ளது. எனவே அடுத்து வரும் ஆண்டுகளில் இதன் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
வர்த்தகம்
பதஞ்சலியோடு சுமார் 5 லட்சம் பேர் Franchiser-களாக இருக்கிறார்கள். அது போக ஆன்லைன் விற்பனை தலமான அமேசான் மற்றும் மிகப் பெரிய ரீடைல் கடையான பிக் பசாரிலும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் விற்கப்படுகின்றன. தற்போதைய நிலைப் படி 90% கடைகளில் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளதாம்.
ஒரு டவுட்டு
நீங்க தான் முற்றும் துறந்த ஞானி, ஆன்மீகவாதி, சாமியார் தான. உங்களுக்கு காசு வந்தா என்ன, வரலென்னா என்ன, நீங்க தான் மண் பானையில இருந்து தான தண்ணி மொண்டு குடிப்பீங்க அப்புறம் எதுக்குங்க வருத்தப்படுறீங்க என ஒரு தரப்பு நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். இன்னொரு தரப்பு, சாமி, நீங்க செய்ய வேண்டிய நல்லத, அரசாங்கம் செய்யட்டும், ஒழுங்கா ஜிஎஸ்டி வரி கட்டுங்க எனவும் கொந்தளித்திருக்கிறார்கள். இப்ப என்ன நீங்க செய்ய வேண்டிய நல்லத இனி கொஞ்சம் கம்மியா செய்யப் போறீங்க அவ்வளவு தானா... நாங்க பாத்துக்குறோம் நீங்க நஷ்டத்த நெனச்சி வருத்தப்படாதீங்க.