ஜியோமயம் ஆன பின், டெலிகாம் சந்தையில் சண்டை என்பது சகஜமாகிவிட்டது. இந்திய டெலிகாம் சந்தையில் தனி காட்டு ராஜாவாக இருந்த ஏர்டெல்லை, ஜியோ ஊற போட்டு அடிக்க ஆரம்பித்ததை நாம் தினமும் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை மீண்டும் ஏர்டெல்லுக்கு கொடுத்திருக்கிறது முகேஷ் அம்பானியின் ஜியோ.
ஏர்டெல்-க்கு ஆப்பு
கடந்த ஆறு வருடமாக இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவை வழங்கி வந்தது ஏர்டெல் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம். ஏர்டெல் உடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிகிறது. 2019 முதல் இந்திய ரயில்வே ஊழியர்களுக்கான சியூஜி டெலிகாம் சேவை வழங்குவதற்கான டெண்டரில் மீண்டும் ஜியோ ஜெயித்திருக்கிறது.
கொந்தளித்த ஏர்டெல்
ஏற்கனவே ஏர்டெல்லை காலி செய்யும் ஜியோவின் வளர்ச்சி, அலற வைக்கும் புதிய திட்டங்கள், அள்ளிக் கொடுக்கும் ஆஃபர்கள் மத்தியில் திணறிக் கொண்டிருந்த ஏர்டெல்லுக்கு இந்த ஏலத்தில் தோற்றது மிகப் பெரிய பின் அடைவைக் கொடுத்திருக்கிறது. வழக்கம் போல ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் நிறுவங்களை விட மிகக் குறைந்த விலைக்கு சேவையை வழங்குவதாக குறிப்பிட்டு ஏலத்தை தன்வசம் ஆகிவிட்டது.
நட்டம்
இந்திய ரயில்வேயில் சுமார் 1.95 லட்சம் ஊழியர்களுக்கு தொல்லைபேசி சேவை வழங்கிய ஏர்டெல் நிறுவனம் வருடாவருடம் சுமார் 100 கோடி வரை சம்பாதித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே நஷ்டத்தில் தவிக்கும் ஏர்டெல் நிறுவனத்துக்கு இந்த 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது நட்டக் கணக்கை அதிகரிக்கவே செய்யும். வரும் டிசம்பர் 31, 2018 உடன் ரயில்வே ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.
ரயில்டெல்
புதிய சேவை வழங்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பணியை ரயில்வே நிர்வாகம் ரயில் டெல் எனும் ரயில்வேயின் பொதுச் சேவை அமைப்பிடம் ஒப்படைத்தது. ரயில் டெல் ஏலத்தை நடத்தி, அதன் முடிவில் ஜியோ நிறுவனத்தை தேர்வு செய்திருக்கிறது.
இலவச குரல் அழைப்புகள்
இந்திய மக்களுக்கு இலவசம் காட்டி இழுத்தது போல, ரயில்வேக்கும் ஜியோ நிறுவனம் இலவச அழைப்புகள் என்கிற பிரம்மாஸ்திரத்தை வழங்கியுள்ளது. 3ஜி / 4ஜி சேவைகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க இருக்கிறதாம். இது தான் ரயில்வே டெண்டர் ஜியோவைத் தேடி வர முக்கிய காரணமாம்.
திட்டங்கள்
ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு ஒரு மாதத்துக்கு 60 ஜிபி டேட்டா 125 ரூபாய்க்கும், இணை செயலாளர் பிரிவு அதிகாரிகளுக்கு ஒரு மாதத்துக்கு 45 ஜிபி டேட்டா 99 ரூபாய்க்கும், குரூப் C ஊழியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 30 ஜிபி டேட்டா வெறும் 67 ரூபாயிலும் வழங்க இருக்கிறதாம்.
அதிக வாடிக்கையாளர்கள்
ஏர்டெல் நிறுவனம் சுமார் 1.95 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே சேவை அளித்தது. ஆனால் ஜியோ தற்போது 3.78 லட்சம் ஊழியர்களுக்குச் சேவை அளிக்கவுள்ளது. அதிக வாடிக்கையாளர்கள் கைவசம் இருக்கும் நிலையில் ரயில்வேக்கு குறைந்த விலையில் சேவை வழங்க ஜியோ முன் வந்திருக்கிறது.
செலவு குறைவு
ரயில்வே டெண்டர் விடும் போதே "இலவச அழைப்புகள் கட்டாயம் வழங்க வேண்டும்" என்கிற நிபந்தனை உடன் தான் வெளியிட்டது. இதை ஜியோ மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் ரயில்வேக்கு கிட்டத்தட்ட 35% செலவுகள் குறையுமாம்.
ரயில்வேக்கு 35 சதவிகித செலவுகள் குறைவு, ஜியோவுக்கு 3.78 லட்சம் வாடிக்கையாள்ர்கள் வரவு, ஏர்டெல்லுக்கோ 100 கோடி செலவு... என ரைமிங் காட்டுகிறார்கள். பாவம் ஏர்டெல் பட்ட காலிலேயே பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் ஒரே நபரால்.