இன்று வரை இந்தியாவில் நடக்கும் அநியாயங்கள், தவறுகளை எல்லாம் தட்டிக் கேட்டு இந்திய சட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நீதி மன்றத்தில் இருந்து சில கடுமையான வார்த்தைகள் வந்திருகின்றன. ஆனால் பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதி மன்றத்தையே மதிப்பதில்லை என்பது வேற கதை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது சென்னை உயர் நீதி மன்றம் தமிழர்களையும், செயல்படாத தமிழக அரசையும் பார்த்து கேட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழர்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கப்படுவதால் சோம்பேறிகளாகிக் கொண்டே வருகிறார்கள். இவர்கள் உழைக்க விரும்புவதில்லை. எனவே தான் சின்ன சின்ன வேலைகளுக்குக் கூட வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு வர வேண்டி இருக்கிறது.
எதிரானது அல்ல
தமிழக அரசு இயலாதவர்களுக்ம், ஏழை எளிய மக்களுக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகைகளைக் கொடுப்பதை உயர் நீதிமன்றம் வரவேற்கிறது. ஆனால் எல்லோருக்கும் ஏன் கொடுக்க வேண்டும் என்று தான் கேள்வி எழுப்புகிறது.
கணக்கு
2017 - 18 நிதி ஆண்டில் 2110 கோடி ரூபாயை தமிழக அரசு இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் செலவு செய்திருக்கிறது. 2000 கோடி ரூபாய் என்பது சாதாரண தொகை அல்ல. இதனால் எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்களை செய்யலாம். இந்த தொகையை ஒரு முதலீடாகவே கருத முடியவில்லை. செலவுக் கணக்கில் தான் வருடாவருடம் எழுத வேண்டி இருக்கிறது.
செலவு கணக்கு
இந்த தொகை ஒரு பெரிய செலவு தொகையாகவே தொடர்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்த செலவு தொகை பெருகிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைய வில்லை. இதை உண்மையாகவே தேவைப்படும் நபர்களுக்குத் தான் போய் சேர்கிறதா என்பதை நீதிமன்றம் கேள்விக்கு உள்ளாக்குகிறாது.
மற்றவர்களுக்கு
தமிழக அரசு யாருக்காக இந்த திட்டத்தை நடத்துகிறது. உண்மையாகவே ஏழை எளிய மக்களுக்குத் தான் நடத்துகிறது என்றால், யார் ஏழை என கணிக்க தமிழக அரசிடம் ஏதாவது கணக்கு இருக்கிறதா...?
கணக்கெடுங்கள்
ஒருவேளை ஏழை என்கிற பெயரில் எல்லோருக்குமே இந்த இலவச அரிசி வழங்கப்படுகிறது என்றால், அது ஏழை அல்லாதவர்களையும் அரசு அவர்களை வளப்படுத்துவதாகத் தானே ஆகிறது. எனவே யார் எல்லாம் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் என கணக்கெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டிருக்கிறது.
இதுவரை
அதோடு இதுவரை தமிழக அரசு இலவச அரிசி திட்டத்துக்காக ஏதாவது கணக்கெடுப்புகள், மதிப்பீடுகள் செய்திருந்தால் அதையும் சமர்பிக்குமாறு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இனி இலவச அரிசி ஏழைகளுக்கும், வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.
புதிய பட்ஜெட்
யார் ஏழைகள், ஏழைகளை எப்படி வகைப்படுத்துகிறார்கள், எத்தனை வகைப்பாட்டு ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினால் என்ன செலவாகும் என்பதையும் நீதி மன்றத்திடம் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
அட்வகேட் ஜெனரல்
இலவச திட்டங்களில் இருந்து வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களை நீக்குவது தொடர்பான விவரங்களை பெற கால அவகாசம் கேட்டிருக்கிறார் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயன்.
எல்லாம் அரசியல்
ஒரு அரசு உண்மையாகவே தேவை இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை தந்தது. அடுத்து வந்த அரசு அதை அனைத்து தரப்புக்குமான விஷயமாக மாற்ரி அரசியல் ஆதாயம் தேடி இருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது என நீதி மன்றம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.