இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி சேவை அளிக்கும் OYO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனம் இந்தியாவை விடவும் சீனாவில் வேகமாகவும், அதிக ரூம்களுடன் வர்த்தகத்தில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் OYO சீனாவில் நவம்பர் 2017ஆம் ஆண்டில் தனது வர்த்தகத்தைத் துவங்கியது. வெறும் ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில் சுமார் 265 நகரங்களில் OYO தற்போது வர்த்தகம் செய்து வருகிறது, இது எந்தொரு இந்திய நிறுவனத்தாலும் நினைத்து பார்க்க முடியாத ஒரு வளர்ச்சி என்றால் மிகையாகாது.
OYO நிறுவனம் தற்போது 5.5 பில்லியன் டாலர் மதிப்பிடப்படும் நிலையில் சீனாவில் மட்டும் 1,80,000 ரூம்களுடனும் 4000 குத்தகை மற்றும் பிரான்சைஸ் சொத்துக்கள் உடன் சீனாவில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியா மற்றும் தென் ஆசியாவில் இதன் எண்ணிக்கை 1,49,000 ரூம் மட்டுமே. இந்தியா மற்றும் தென் ஆசிய வர்த்தகத்தை ஒப்பிடும்போது சீனாவில் அதிக அறைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறார் OYO நிறுவன தலைவர் ரித்தீஷ் அகர்வால்.
இந்தத் தடாலடி வளர்ச்சியில் வெறும் ஒரு வருட கால வர்த்தகத்தில் சீனாவில் டாப் 10 ஹோட்டல் செயின் நிறுவனங்களில் OYO இடம்பெற்றுள்ளது.
மேலும் சீனாவில் தற்போது புக்கிங் எண்ணிக்கை 25 சதவீதத்தில் இருந்து 60-70 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.