கறுப்புப் பணத்துக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் இந்திய அரசின் இம்சையைத் தாங்க முடியாத சுவிட்சர்லாந்து, 2 இந்திய நிறுவனங்களின் விவரங்களை அளிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. .ஒன்று மும்பையைச் சேர்ந்தது, மற்றொன்று சென்னையைச் சேர்ந்தது. சென்னையைச் சேர்ந்த அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கறுப்புப்பண விவரம் வெளியாகும்போது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதி அளித்த மோடி
கறுப்புப் பணத்தை மீட்பதே இலட்சியம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த மோடி, அதில் சமரசமில்லாமல் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், நிர்வாக ஒத்துழைப்பின் பேரில் விவரங்களை தருவதற்கான அரசாணையை சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டு விட்டது.
ஜியோடெசிக்
1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோடெசிக் நிறுவனம், டெக்னாலஜி சொல்யூஷன் சேவையை செய்து வந்தது. நாளுக்கு நாள் வருவாயை ஈர்த்த இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. முறைகேடான பணப்பரிவர்த்தனை காரணமாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் நடவடிக்கைக்கு உள்ளானது.. தொடர்ந்து அமலாக்கத்துறை, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு ஆகிய விசாரணை அமைப்புகள் இதன் மீது வழக்குகளை பாய்ச்சி இறுக்கி வருகிறது.
பலே கில்லாடிகள்
ஜியோடெசிக் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ்குமார், நிர்வாக இயக்குநர் கிரண் குல்கர்ணி மற்றும் செயல் இயக்குநர் பிரசாந்த் முலேகர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்களால் பதுக்கப்பட்ட விவரங்களையும் சுவிஸ் அரசு விரைவில் இந்திய அரசுக்கு தர உள்ளது. இதனால் சிக்கல் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது..
சுழலும் அரசியல் புயல்
சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த நிறுவனம், ஜெட் வேகத்தில் வளர்ச்சியை எட்டியது.. அரசியல் வாதிகளின் தொடர்புகளும், அதனால் ஏற்பட்ட பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளும் வருமானவரித்துறை பலகட்ட சோதனைகளை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.. தமிழகத்தில் ஆளுங்கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு குடும்பத்தினர், பினாமி பெயரில் நடத்தப்படும் நிறுவனம் என்று கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தித்தான் சென்னைக்கு அருகில் 320 ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டது. சுவிஸ் வங்கி இதன் நிறுவனத்தின் விவரங்களை வெளியிடும்போது தமிழக அரசியலில் மீண்டும் புயல் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.