ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio )வருகைக்குப் பிறகு, தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடியான கட்டணக் குறைப்புகள், கேஷ் பேக் ஆபர்கள், கிப்ட் வவுச்சர்கள், கூப்பன்கள் என வாடிக்கையாளர்களை சலுகை மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், லாபத்தைக் குறி வைத்தும் நடந்து வரும் போரில், சந்தை யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்பது கேள்வியாக இருக்கிறது.
ஏர்டெல் ஆதிக்கம்
6 மாதங்களுக்கு முன்பு இந்திய தொலைத் தொடர்பு சந்தையில், ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்துக்கு இணையாக எந்த ஒரு நிறுவனமும் போட்டியில் இல்லை. வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும், Revenue market share மற்றும் லாபத்திலும் முன்னணியில் இருந்தது. அதனால்தான் வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்ற கணக்கில் கட்டணங்களை நிர்ணயித்து பாடாய் படுத்தி வந்தது. இது எதிர்காலத்தில் வரலாறாகிப் போகும் என்பதை அந்த நிறுவனமே எதிர்பார்க்காத ஒன்று..
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்
இந்த தருவாயில்தான் ரிலையன்ஸ் ஜியோ , இந்திய தொலைத் தொடர்புத்துறையில் காலடி எடுத்து வைத்தது. சலுகை அறிவிப்புகளாலும், அகன்ற அலைவரிசை சேவைகளாலும் மற்ற நிறுவனங்களை ஆட்டம் காண வைத்தது. கட்டணக்குறைப்புக்கு ஈடுகொடுக்க முடியாத, டாடா குழுமம் ( Tata Group) போட்டியிலிருந்து ஒதுங்கியது. வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ( Vodafone India, Idea Cellular ) நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன.
3 நிறுவனங்கள் போட்டி
சந்தையில் இன்று ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களே முக்கியமான போட்டியாளர்களாக உள்ளனர். சலுகைகளை அறிவிப்பதில் யாருக்கும் யாரும் சளைத்தவர் அல்ல என்ற ரீதியில் நிலைமை இருக்கிறது. இதில் யார் முந்துவார் என்று சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
இழப்பு- லாபம்
வோடபோன், ஐடியா இணைப்புக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களையும், Revenue market share கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆனால் செப்டம்பர் மாத காலாண்டில் 4,970 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே செப்டம்பர் மாத இறுதியில் 435 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட வோடபோன் ஐடியாவைவிட, 252 மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டுமே பின் தொடரும் ரிலையன்ஸ் ஜியோ 681 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது.
விருப்பம் - விளைவு
ஜூலை-செப்டம்பர் மாதத்தில் இந்தியச் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்தின் வர்த்தகம் 11 சதவீதம் படுத்தது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 2.3 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் சேவையை கைவிட்டு வெளியேறினார்கள். ஆனால் அதே மாதத்தில் 13 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
யார் வெற்றியாளர் ?
அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள், Revenue market share ஆகிவற்றைக் கொண்டு வோடபோன் ஐடியாவை, நம்பர் ஒன் நிறுவனமாக கருத முடியாது என்கிறார் மும்பையைச் சேர்ந்த வல்லுநர் ஒருவர். ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு தொலைத் தொடர்புத்துறையின் பரிமாணங்களே மாறிவிட்டதாக கூறுகிறது செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (COAI). தற்போது தொலைத் தொடர்பு துறை, Voice சேவையிலிருந்து Data சேவையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்த COAI Director General ராஜன் மேத்யூ, இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்துத்தான் முதலிடம் யாருக்கு என்பதை யோசிக்க முடியும் என்றார். 4 ஜி நெட்வொர்க் சேவையே தொலைத் தொடர்பு துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அளவீடாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தயார் நிலை
மார்ச் மாதத்துக்குள் 4G நெட்வொர்க் சேவையை 99 சதவீதம் விரிவுபடுத்த ரிலையன்ஸ் ஜியோ இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேநேரம் 90 சதவீதம் நெட்வொர்க்கை வழங்கும் அதிரடியான திட்டங்களை செயல்படுத்த ஏர்டெல் நிறுவனம் தயாராக உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 70 சதவீத 4G சேவையை விரிவுபடுத்தலாம் என்ற நம்பிக்கையில் உள்ள வோடபோன் ஐடியா, 2019- 20 ஆம் ஆண்டில் 80 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஜியோ Advance
2G யில் இருந்து 4G சேவைக்கு வாடிக்கையாளர்களை மாற்றுவதில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றன. கைக்கு எட்டும் தூரத்தில் பலன் கிட்டுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. அதே நேரத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் இதற்கான நடவடிக்கைகளை தொடங்கவே இல்லை என்று கூறப்படுகிறது. போகிற போக்கில் ஏர்டெல், வோடபோன் ஐடியாவை விட, ஜியோவின் 4G பயனாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாபம்- வருவாய்
தொலைத் தொடர்பு துறையில் யார் முன்னிலை வகிப்பார் என்பதை கூற முடியாது. இந்த போட்டியானது அவர்களின் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த வைக்கும். வாடிக்கையாளரின் எண்ணிக்கையை வைத்து தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்த Gartner துணைத் தலைவர் அமரேஷ் நந்தன், வருவாய், லாபத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்கிறார்.
சீர்திருத்தம்
4 ஜி சீர்திருத்தத் திட்டத்துக்காக வோடபோன் ஐடியா 25,000 கோடி ரூபாயை செலவிட முடிவு செய்துள்ளது.. 4 ஜி ஸ்பெக்ட்ரத்துக்காக மார்ச் மாதம் வரை 3,000 கோடி ரூபாயும், அடுத்த நிதியாண்டின் ஜூன் வரை 12,000 கோடி ரூபாயும் செலவாகும் என Creadit Suisse தெரிவித்துள்ளது.
முடிவுக்கு ஒரு வருடம்
ஒவ்வொரு மாதமும் கட்டணக் குறைப்பு சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை ரிலையன்ஸ் ஜியோ அதிகரித்து வருகிறது. இதேபோல் ஏர்டெல் நிறுவனமும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் யார் முதலிடத்தை கைப்பற்றப் போகிறார்கள் என்பதை கணிக்க இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
வாடிக்கையாளர்கள் குஷி
தொலைத் தொடர்புத்துறையில் பந்தயக் குதிரைகள் பறந்து கொண்டிருக்கின்றன. வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் வாடிக்கையாளர்கள் காட்டில் சலுகை மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சலுகைகளை அனுபவிக்க இனி பணம் தேவையில்லை. சில்றை இருந்தா போதும் பாஸ்....