ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் கடந்த 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை அன்று தீர்ப்பளித்தார். அவர் தீர்ப்பில் "ஸ்டெர்லைட் ஆலையை கேள்விக்கு உட்படுத்தும் உத்தரவுகளை புறக்கணித்துவிட்டு செயல்பட அனுமதிக்கிறோம்" எனச் சொல்கிறார்.
வேதனை
அதோடு, ஸ்டெர்லைட் ஆலை இயங்கவும், பிரச்னைக்குரிய ரசாயனங்களை கையாளவும் ஒப்புதல் அளிக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை அறிவுறுத்தி இருக்கிறார். அவர் தீர்ப்பில் அடிக் கோடிடும் விஷயம் என்னவென்றால் "சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்" விதிகளை வகுத்து அனுமதி அளிக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறார்.
மின்சாரம் கொடு
சரி எல்லாம் முடிந்தது இப்போது ஸ்டெர்லைட் ஆலை தன் உற்பத்தியைத் தொடங்க மின்சாரத்தை கொடுக்குமாறு தமிழக மின்சார வாரியத்துக்கும் உத்தரவிட்டிருக்கிறது பசுமை தீர்ப்பாயம். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோ, தூத்துக்குடியில் மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருப்பதோ, வருங்கால சந்ததிகளுக்கு மாசுபட்ட சுற்றுச்சூழலை தருவதோ தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு குற்றமாகப் படவில்லை.
சுற்றுச்சூழல் மாசு
ஸ்டெர்லைட் நிறுவனம் எப்படி தான் உண்டாக்கிய மாசைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ... அதே போல் இங்கு பிலாஸ்டிக் பொருட்களை பெரிய அளவில் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பெரு நிறுவனங்களும் அரசு சொல்லும் விதிமுறைகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் அல்வா கிண்டுகிறது. ஸ்டெர்லைட் போன்ற ஆலைக் கழிவுகள் இன்றே பாதிக்கும் என்றால், பிலாஸ்டிக் கழிவுகள் நம் சந்ததியை பொறுத்திருந்து பாதிக்கும்.
பிலாஸ்டிக் கழிவுகள்
உலக அளவில் ஆண்டுக்கு 250 மில்லியன் டன் பிலாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறதாம். இவை எல்லாமே ஒரு கட்டத்தில் கழிவாக வெளியே வரும். இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 70 - 90 லட்சம் டன் பிலாஸ்டிக் கழிவுகள் உருவாவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சில அறிக்கைகள் சொல்கின்றன. சாதாரன பிஸ்கேட் பாக்கெட் தொடங்கி, மிகப் பெரிய விண்வெளி ராக்கெட் வரை அனைத்திலும் ஒரு கடுகளவாவது பிலாஸ்டிக் பயன்படுகிறது.
பிலாஸ்டிக் மயம்
பிலாஸ்டிக் இல்லாத இடம் உண்டா..? அது மாசுத்தப்படுத்தாது இடம் உண்டா..? அத்தனை எளிதில் மக்காது..? மொத்த நிலம், நீர், காற்று என அனைத்து பரப்புகளையும் காலப் போக்கில் அசால்டாக மாசுபடுத்தும். நிலத்தில் மக்கி மண்ணாகப் போக குறைந்தது 300 - 500 ஆண்டுகள் ஆகும். நிலத்தை மலடாக்கி விடும்.
கடலில் பிலாஸ்டிக்
திறந்த வெளியில் சூரிய ஒளி, மழை நீர், காற்று என அனைத்தும் கடலில் மிதக்கும் பிலாஸ்டிக்கில் படுவதால் நிலத்தை விட நீரில் விரைவாக மக்கும், ஆனால் அதிகப்படியான ரசாயனங்களை வெளியிட்டு கடலை மாசுபடுத்திவிட்டுத் தான் மக்கும். இப்படி பிலாஸ்டிக் கேடுகளை 1000 பக்கத்துக்கு எழுதலாம். இதை தடுக்க இந்தியாவில் சில புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. வழக்கம் போல் அதுவும் ஏட்டளவில் தான் இருக்கின்றன.
2016-ல் சட்டம்
பிலாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகம் சில புதிய விதிகளைக் கொண்டு வந்தது. 2016-ல் Plastic Waste Management விதிகளை மத்திய அரசு வெளியிடுகிறது. அதில் EPR - Extended Producer Responsibility என்கிற ஒரு புதிய விதியும் சேர்க்கப்படுகிறது. இந்த EPR - Extended Producer Responsibility-ன் திட்டமே சுற்றுச்சூழலை பிலாஸ்டிக்கால் மாசுபடுத்தும் நிறுவனங்களை வைத்தே பிலாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்துவது அல்லது அதை சுத்தம் செய்வது தான்.
திட்டம் என்ன..?
பிலாஸ்டிக்குகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், தங்கள் பயன்படுத்தும் அளவுக்கு பிலாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக MLP ரக பிலாஸ்டிக்குகளை கட்டாயம் மறு சுழற்சி செய்தே ஆக வேண்டும் என்பது தான் இந்த EPR - Extended Producer Responsibility திட்டத்தின் சாரம்.
MLP என்றால் என்ன..?
MLP - Multilayered Packaging. நாம் அன்றாடம் பயன்படுத்தும், சோப்பு, ஷாம்பூ, டீத் தூள், காபித் தூள், ஜூஸ், பிஸ்கெட் பாக்கெட்டுகள் என எல்லாமே இன்று மல்டி லேயர் பேக்கேஜிங் முறையில் பாக்கெட்டில் வருபவை தான். இந்த பாக்கெட்டில் வெறும் பிலாஸ்டிக் மட்டும் இருக்காது. காகிதம், அலுமினியம், பிலாஸ்டிக் என உள்ளே வைக்கப்படும் பொருட்களுக்குத் தகுந்தாற் போல் பொருட்கள் பயன்படுத்தப்படும். அப்போது தான் நீண்ட நாட்களுக்கு பொருட்கள் கெடாமல் இருக்கும்.
ஏன் குறிப்பாக MLP
பொதுவாக Polyethylene Terephthalate (PET) பிலாஸ்டிக்குகள் நல்ல விலைக்கு வாங்குவார்கள். எளிதில் மறு சுழற்சிக்கும்m எடுத்துக் கொள்வார்கள். காரணம் இதில் பிலாஸ்டிக் தவிர வேறு ரசாயனங்களோ அல்லது கனிமங்களோ பெரிய அளவில் இருக்காது. ஆனால் MLP-ல் பிலாஸ்டிக்குகளை மட்டும் பிரித்து எடுப்பதற்கே அதிகம் செலவளிக்க வேண்டி இருக்கும். அதோடு MLP ரக குப்பைகளை PET பிலாஸ்டிக் குப்பைகள் விலைக்கு வாங்கவும் ஆள் கிடையாது. அதனால் தான் மத்திய அரசு இந்த MLP ரக குப்பைகளை 100% (நிறுவனங்கள் பயன்படுத்தும் அளவுக்கு) செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
MLP என்ன செய்வார்கள்
MLP ரக குப்பைகளை பிலாஸ்டிக் மட்டும் தனியாக பிரித்தெடுத்து அதை மீண்டும் மறு சுழற்சிக்கு அனுப்புவார்கள். மற்ற காகிதம், அலுமினியம் போன்றைவைகளை அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளாகவோ அல்லது சிமெண்ட் உறத்தி ஆலைகளுக்கு எரி பொருளாகவோ அனுப்பி விடுவார்கள்.
நவீன அனல் மின் நிலையங்கள்
இந்தியாவிலேயே குப்பைகளை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரண்டாம் தலைமுறை அனல் மின் நிலையங்கள் இரண்டே இரண்டு தான். அதுவும் தில்லியில் தான் இருக்கின்றன. அதை எப்படி இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் பயனபடுத்த முடியும் என நியாயமான கேள்விகளைக் அரசிடம் முன் வைத்திருக்கிறது கார்ப்பரேட்டுகள். அதற்கு அரசிடம் பதில் இல்லை.
நாங்க இல்ல
திட்டம் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த ஆரம்பிக்கும் போதே பிரச்னை வெடிக்கிறது. அரசு சொன்ன புதிய Plastic Waste Management விதிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் Extended Producer Responsibility - EPR திட்டத்தில் பிலாஸ்டிக்குகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டுமா அல்லது பிலாஸ்டிக்குகளை தயாரிக்கும் நிறுவனங்களா அல்லது இறுதியாக பொருட்களை தங்கள் பிராண்ட் பெயரில் விற்கும் நிறுவனங்கள் இந்த EPR திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா..? என நிறுவனங்கள் மற்றவர்களை கை காட்டி தப்பித்தன. அரசும் முழி பிதுங்கி நின்றது.
மாநிலங்களில் பதிவு செய்
அதே போல் Extended Producer Responsibility - EPR-ல் இணைந்து செயல்படும் நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களில் தங்கள் Extended Producer Responsibility - EPR திட்டங்களை பதிவு செய்து செய்ல்பட வேண்டும் எனவும் சொல்லப்பட்டது. பல மாநிலங்களில் ஆலைகளை நடத்தும், வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெளிவு படுத்தப்படவில்லை. இந்த ஓட்டையையும் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் டாடா காட்டின. அரசும் வாய்பொத்தி நின்றது.
தொடங்கு
ஒரு வழியாக Extended Producer Responsibility - EPR திட்டத்தில் இன்னார் எல்லாம் இணைய வேண்டும் என பட்டியல் இட்டது மத்திய அரசு . அதில் இன்று வரை வெறும் 45 நிறுவனங்கள் மட்டுமே தங்கள் Extended Producer Responsibility - EPR திட்டங்களை முறையாக அரசிடம் பதிவு செய்திருக்கிறார்கள் என மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியமே கணக்கு சொல்கிறது. கேவலமாக இல்லை..?
உங்களுக்கு பதிலாக
Extended Producer Responsibility - EPR திட்டத்தில் இணைந்த நிறுவனங்கள் தங்களால் நேரடியாக பிலாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியவில்லை என்றால் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வலைதளத்தில் பதிவு செய்து கொண்ட குப்பைகளை மறுசுழற்சிக்கு எடுத்துக் கொடுக்கும் நிறுவனங்களை பயன்படுத்தச் சொல்லி இருக்கிறது. கார்ப்பரேட்டுக்கு அடி வருடுவது போல்..!
இலக்கு
இன்னும் ஆயிரக் கணக்கான நிறுவனங்களை Extended Producer Responsibility - EPR திட்டத்தில் இணைக்கவேஇல்லை. அதற்குள், இப்போது ஆண்டுக்கு ஒரு நிறுவனம் பயன்படுத்தும் மொத்த MLP ரக குப்பைகளில் 20 சதவிகிதத்தை மறு சுழற்சி செய்யச் சொல்லி இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுக்குள் 100 சதவிகித MLP ரக குப்பைகளையும் மறு சுழற்சி செய்ய வேண்டும் என திட்டம் வைத்திருக்கிறார்களாம்.
ஐடிசி
Extended Producer Responsibility - EPR திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட 45 நிறுவனங்களில் ஐடிசி மட்டும் தான் மறு சுழற்சி செய்த பிலாஸ்டிக் விவரங்களை பொது வெளியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சொல்லி இருக்கிறது. ஐடிசி ஒரு ஆண்டுக்கு பயன்படுத்தும் 52,000 டன் MLP ரக பிலாஸ்டிக்குகளில் 7,000 டன்னை சேகரித்து மறு சுழற்சி செய்திருக்கிறதாம். மற்ற நிறுவனங்கள் என்ன ஆனது. குறைந்தபட்சம் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறார்களா..? இல்லையா..? என்கிற விவரங்களைக் கூட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லவில்லை. அந்த அளவுக்குத் தான் அரசை மதிக்கிறது கார்ப்பரேட் நிறுவனங்கள். அரசும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு நல்ல திட்டங்களைக் கிடப்பில் போடுகிறது.
மற்ற FMCG நிறுவனங்கள்
பொதுவாக இந்த FMCG நிறுவனங்கள் தான் அதிக அளவில் நுகர்வோருக்கான பொருட்களை பிலாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கிறார்கள். இவர்களில் ஐடிசி மட்டுமே தன் நிலையை வெளிப்படுத்தி இருக்கிறது. ஹிந்துஸ்தான் யுனிலிவர், ப்ராக்டர் & கேம்பில், கோல்கேட் பாமாலிவ் போன்ற நிறுவனங்கள் வாயை திறக்காமல் அரசு சொல்வதை எல்லாம் கேட்டால் காசு பார்க்க முடியாது என தங்கள் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரபல பத்திரிகை இதைப் பற்றிக் கேட்ட போது கூட பதில் சொல்லவில்லை.
மற்ற நிறுவனங்கள்..?
மத்திய அரசு, ஒட்டு மொத்த இந்தியாவையே கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு அமைப்பு. அவர்கள் சொல்லியே ஒரு விஷயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. அதை மீறி வற்புறுத்தினால் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை காட்டு தப்பிக்கிறார்கள். அது சரி ஓட்டை இருந்தால் தானே, வாங்கிய காசுக்கு நன்றி காட்ட முடியும்.
அதை எல்லாம் அடைத்துவிட்டு, நாட்டுக்கு நல்லது செய் எனச் சொன்னால் வெறும் 45 கம்பெனிகள் மட்டும் திட்டத்தில் இணைகிறது. அதில் ஒரு நிறுவனத்திடம் மட்டும் தான் எவ்வளவு பிலாஸ்டிக் மறு சுழற்சி செய்திருக்கிறோம் என கணக்கு இருக்கிறது என்றால்.... இங்கு நடப்பது கார்ப்பரேட்டுகளின் ஆட்சி தானே...?
வருத்தமான உண்மை..?
பிறகு எப்படி ஸ்டெர்லைட் போன்ற பயங்கர ஆலைகள், அரசு சொல்வதைக் கேட்டு நடக்கும். இன்னும் எத்தனை 13 பேரின் உயிர்களை பலி கொடுக்க இருக்கிறோம் தெரியவில்லை..? சுற்றுச்சூழல் சீர் கேட்டால் இன்னும் எத்தனை பேர் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் வந்த தங்களை உயிரை விடப் போகிறோம் எனத் தெரியவில்லை...?