மும்பை: இந்தியாவின் 50 சதவிகித சொத்துகள் 9 கோடீஸ்வரர்களிடம் மட்டும் இருக்கிறது, 10 சதவிகித கோடீஸ்வரர்கள் 77 சதவீத சொத்துகளை வைத்துள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் 13.6 கோடி ஏழைகள் இருப்பதாகவும் இது இந்திய மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும், ஏழைகள் ஆண்டுக்கு ஆண்டு இன்னும் ஏழைகளாக மாறி வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல என்றும் ஆக்ஸ்பார்ம் அறிக்கை எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற உள்ள நிலையில், சர்வதேச நலஅமைப்பான ஆக்ஸ்ஃபாம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய கோடீஸ்வரர்கள்
கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் 58 சதவிகித சொத்துக்கள், 1 சதவிகித பணக்காரர்களிடம் குவிந்ததுள்ளதாகத் தெரிவித்தது. 2017ஆம் ஆண்டு ஆண்டு அந்த 1 சதவிகித பணக்காரர்களிடம் கூடுதலாக 15 சதவிகித சொத்துக்கள் குவிந்தது. கடந்த ஆண்டு கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 39 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.
கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துகள் மட்டும் கடந்த ஆண்டு ரூ.2,200 கோடி அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள 10 சதவிகித கோடீஸ்வரர்கள் நாட்டின் 77.4 சதவிகித ஒட்டுமொத்த சொத்துகளையும் வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு சதவிகித கோடீஸ்வரர்கள் மட்டும் நாட்டின் 51.53 சதவிகித சொத்துகளையும் வைத்துள்ளனர்.
13. 60 கோடி ஏழைகள்
இந்தியாவில் கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து 10 சதவிகித மக்கள் அதாவது, 13.60 கோடி மக்கள் தொடர்ந்து வறுமையிலும், ஏழ்மை நிலையிலும் இருந்து வருகின்றனர். நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது ஏழைகள் கையில் கூட 2000 கோடி புழங்குகிறது என்று அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அடிமட்டத்தில் உள்ள 60 சதவிகித மக்களிடம் நாட்டின் 4.8 சதவிகித சொத்துகள் மட்டுமே உள்ளன.
கஷ்டப்படும் ஏழைகள்
பல கோடி ஏழைகள் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் திகரித்துக்கொண்டேயிருக்கிறது அதிர்ச்சி அளிப்பதாக ஆக்ஸ்ஃபாம் சர்வதேச அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பான்யிமா கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள ஒரு சதவிகித கோடீஸ்வரர்களுக்கும், மீதமுள்ள இந்திய மக்களுக்கும் இடையிலான வெறுப்பூட்டும் வகையிலான இடைவெளி அதிகரித்தால், நாட்டின் சமூக, ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாக சிதைந்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
18 புதிய கோடீஸ்வரர்கள்
நாட்டின் 9 பணக்காரர்களின் மட்டும் நாட்டின் 50 சதவிகித சொத்துகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்தியா 18 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 119 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியாகும். 2018ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் இந்தியா 70 புதிய கோடீஸ்வரர்களை நாள்தோறும் உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை குழந்தைகள் மரணம்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆரோக்கியமான கல்வி, தரமான சுகாதார வசதிகள் ஆகியவற்றைப் பணக்காரர்கள் மட்டுமே உயர் தரத்தில் பெற்று வருகின்றனர். இந்தியாவில் உள்ள ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள், பணக்கார வீடுகளின் குழந்தைகள் முதல் பிறந்த நாள் கொண்டாடுவதற்குள்ளாக இறக்கும் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது
கல்வி, சுகாதாரம், மருத்துவம்
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் ஒரு சதவிகிதம் பேரின் சொத்துகள் மீது 0.5 சதவீதம் வரி விதித்தாலே நாட்டு மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்கு செலவிடக் கூடுதலாக 50 சதவிகிதம் நிதி கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளின் மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றின் வருவாய் மற்றும் செலவுகள் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 166 கோடியாகும். இது முகேஷ் அம்பானியின் ரூ.2.80 லட்சம் கோடியைக் காட்டிலும் குறைவுதான்.
சமூக சமத்துவமின்மை
இந்த ஆய்வின் முடிவுகள் மூலம், பொதுச்சேவைகளுக்கு அதாவது சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்குக் குறைவான நிதி ஒதுக்குவதன் மூலம் அரசு சமூகத்தில் சமத்துவமின்மையை மோசமாக அதிகப்படுத்தி வருகிறது என்பது தெரியவருகிறது என்கிறார் ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர்.
ஏழைகளுக்கு எதுவுமில்லை
இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான கூலி அடிமாட்டுக் கூலியாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்திருத்தம் என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாறி வருகிறது. கார்ப்பரேட்டுகள், கோடீஸ்வரர்கள் வரிச்சலுகையை அனுபவிக்கிறார்கள். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முறையான மகப்பேறு வசதியும் இல்லை, ஆரோக்கியமான கல்வியும் இல்லை என்பது அமிதாப் பெஹரின் ஆதங்கம்.
குபேரனின் கடாட்சம்
ஆள்பவர்களின் ஆசியும் சரி செல்வத்திற்கு அதிபதிகளான மகாலட்சுமி, குபேரன் அருளும் சரி அந்த பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்றுதான் இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒழியப்போகிறதோ என்பதே இந்திய ஏழைகளின் ஆதங்கமாக உள்ளது.