டெல்லி: பட்ஜெட் உரை பிரிண்ட் எடுக்கும் முன்பாக நிதியமைச்சக பணியாளர்கள் அல்வா சாப்பிட்டு விட்டுதான் பணிகளை தொடங்குகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் உரை பிரிண்ட் செய்ய தொடங்கும் முன் அல்வா கிண்டும் விழா நேற்று நடைபெற்றது.
அருண் ஜெட்லி சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால் அதனை மிஸ் செய்துவிட்டார்.
டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் பணியை அல்வா கிண்டி அனைவருக்கும் பரிமாறிய பின்னர் தொடங்கி வைத்தனர்.
பட்ஜெட் அறிக்கையை உருவாக்கியவர்கள், அச்சிடும் பணியில் ஈடுபட உள்ளவர்கள், அல்வா சாப்பிட்ட நாள் முதல் பட்ஜெட் தாக்கல் செய்து முடியும் வரை அவர்களது வீட்டில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது. மேலும், அவர்கள் தங்களது வீட்டிற்கும் செல்ல முடியாது.
மத்திய பட்ஜெட் உரை
மத்திய பட்ஜெட்டை அச்சடிப்பதற் காக ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பணியாளர்கள் விரும்பி சிறை வைக்கப்படுகிறார்கள். நிதியமைச்சர் உள்பட அனைவரும் மூன்றுகட்ட பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அவை வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த உச்சக் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்படுகின்றன.
பட்ஜெட் அச்சடிப்பு
நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டி மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்தின் கீழ்தளத் தில் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 10 நாள்களுக்கு முன்னதாக அச்சுப் பணி தொடங்கப்படுகிறது. நிதி அமைச்சக அலுவலர்கள் உட்பட அச்சடிப்புப் பணியில் ஈடுபடும் சுமார் 200 பேர் மற்றும் பணியாளர்கள் பட் ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை சுமார் 15 நாள்களுக்கு சிறை வைக் கப்படுகிறார்கள்.
தீவிர சோதனை
பிக்பாஸ் வீடு போல ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. யாருடனும் பேசவும் முடியாது. அங்கே கேமரா மூலம் உள்ள நடப்பதை வெளியே இருப்பவர்கள் பார்க்கலாம். இங்கே எல்லாமே சீக்ரெட். காலையில் எழுவது முதல் உறங்குவது வரை மூடிய கதவுகளுக்கு உள்ளேயே வாழ வேண்டும். டீ முதல் உணவு வரை தேவையான பொருட்கள் மட்டும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும். அவை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும். இந்த கதவுகளுக்குள் பாதுகாப்பு போலீசாருக்கும் அனுமதி இல்லை.
சுவையான பட்ஜெட்
பட்ஜெட் பணிகளைத் தொடங்கும் முன்பு அல்வா பார்ட்டி என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத அரசு விருந்து அளிக்கப்படுகிறது. புனித யாத்திரைக்கு புறப்படுபவர்களை வழியனுப்ப அவரது குடும்பத்தார் செய்யும் சடங்குபோல் இந்த விருந்து அமைகிறது. தித்திப்பான இனிப்பு சாப்பிட்டு விட்டு நிதியாண்டை தித்திப்பாக தொடங்க வேண்டும் என்பதற்காகவே இந்த அல்வா பார்ட்டி நடத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகாலமாக அல்வா கிண்டிய அருண் ஜெட்லி இம்முறை அதனை மிஸ் செய்துள்ளார்.
அல்வாவை மிஸ் செய்த அருண் ஜெட்லி
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிதி அமைச்சரான அருண் ஜெட்லி புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் அல்வா விழாவில் பங்கேற்க முடியவில்லை. அல்வா கிண்டும் விழாவில் அருண் ஜெட்லி பங்கேறக்கவில்லை என்றாலும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.