டெல்லி: மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மாற்றாக, அவர்களின் கடன்களுக்கு ஈடான தொகையை ரொக்கமாக அளித்தால் அவர்கள் அதிக பலன் அடைய முடியும் என்று சர்வதேச நாணய நிதி அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு மானியத்திற்கு பதிலாக நேரடியாக பணம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசகர் கீதா கோபிநாத் இவ்வாறு கூறியுள்ளார்.
நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் விவசாயிகளை புறக்கணித்ததுதான். விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் முறையிட்டும், போராட்டம் நடத்தியும், ஆட்சியாளர்கள் விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.
கடன் பிரச்சினை
தங்களின் கடன் பிரச்சனைகளை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற விரக்தியில் எத்தனையோ விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டனர். இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். நாட்டின் பொருளாதாரமும், பணவீக்க விகிதமும், சீரான அளவில் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமானால், விவசாயத் தொழிலும் நல்ல முறையில் நடைபெறவேண்டும். இதற்கு ஆளும் அரசுகளும் விவசாயிகளின் பிரச்சனைகளைகளையும் கோரிக்கைகளையும் போக்குவதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
கண்டு கொள்ளாத காங்கிரஸ்
மஹாத்மா காந்தியடிகள் கூட, நம் நாடு விவசாயத்தையே நம்பி உள்ளது. எனவே அவர்களின் கோரிக்கைக்கு நாம் செவி சாய்க்கவேண்டும் என்றும் அவர்களின் நல்வாழ்வுக்கு அரசுகள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி நடப்பதாக சொல்லிக் கொண்ட காங்கிரஸ் கட்சி, விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இதனால் தான் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
மறந்த பாஜக
முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு முறை விவசாயிகள் தங்களின் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிடுங்கள் என்று விவசாயிகளை நோகடித்தார். விவசாயிகளை மறந்ததால் தான் விவசாயிகளும் காங்கிரஸ் கட்சியை கை கழுவி விட்டு, அதற்கு பதிலாக பாஜகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினர். ஆட்சியில் அமர்ந்தவுடன் பாஜக அரசு விவசாயிகளை மறந்தனர். விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் ஆட்சியாளர்கள் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. இதன் எதிரொலியே பாஜக கட்சி ஆட்சியில் இருந்த 3 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது.
விவசாயிகள் பிரச்சினை
தோல்வியை ஜீரணிக்க முடியாத பாஜக அரசு, தற்போது யோசிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தலுடன் 7 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தலும் நடக்க உள்ளது. இதில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக கட்சி உள்ளது. எனவே தான் தற்போது விவசாயிகளின் பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது.
பட்ஜெட்டில் சலுகை
மத்தியில் ஆளும் பாஜக கட்சி தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகைகளை வாரி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயிர் விளைச்சலின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக நேரடியாக பணம் வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பண உதவி
இந்தியாவை பொருத்தவரையில் விவசாயிகளின் பிரச்னையும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அவர்களது கடன்களை ரத்து செய்யவும் கூடாது. அதே நேரத்தில் மானியத்திற்கு பதிலாக பண உதவியை செய்யலாம். நடப்பாண்டில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
நிரந்தர தீர்வு
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பொருளாதார வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விவசாயிகளை கவர்வதற்காக அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமே சரியான ஒரு தீர்வு கிடையாது. அதற்கு பதிலாக அவர்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் வங்கிகளுக்கு கடன் சுமை அதிகரிக்கும் என்றும், கூடவே வங்கிகளின் கடன் வழங்கும் திறனும் லாபமும் கடுமையான பாதிப்படையும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கியும் பிற கடன் வழங்கும் வங்கிகளும் வலியுறுத்து வருகின்றன. பொருளாதார வல்லுநர்களும் இதனையே வழி மொழிகின்றனர்.
பொருளாதார வல்லுநர்கள்
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லோக்சபா மற்றும் சில மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதற்கு முன்பே விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் செலவிடப்போவதாக தெரியவந்துள்ளது. இதை எதிர்கொள்வது அனைத்து வங்கிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
21 கோடி விவசாயிகள்
நாடு முழுவதும் சுமார் 21 கோடி விவசாயிகள் உள்ளனர். இவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் செலவு செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக அளவில் பயனடைய முடியும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்ய முடியும்.
ஐஎம்எஃப் கீதா கோபிநாத்
ஒரு விவசாய குடும்பத்திற்கு சலுகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாயை இரண்டு தவணைகளாக வழங்கினால், அவர்களும் ஆண்டுக்கு இருமுறை பயிர் செய்து ஆண்டிற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் வருவாய் ஈட்ட முடியும். தெலுங்கானா மாநிலத்தில் இத்திட்டம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மாற்றாக, அவர்களின் கடன்களுக்கு ஈடான தொகையை ரொக்கமாக அளித்தால் அவர்கள் அதிக பலன் அடைய முடியும் என்று சர்வதேச நாணய நிதி அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கிக்கணக்கில் பணம்
இந்தியாவை பொருத்தவரையில் விவசாயிகளின் பிரச்னையும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளின் கடன் சுமை என்பது அவர்களுக்கும் விவசாயத் துறைக்கும் மிகப்பெரிய துயரமாகும். கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமே அவர்களின் கடன் பிரச்சனைகளுக்கு சரியான நிரந்தர தீர்வாக அமையாது. மானியத்திற்கு பதிலாக பண உதவியை செய்யலாம். ரொக்கமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தினால் அவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று கீதா கோபிநாத் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம்
முறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்பார்க்கப்பட்டதை விட ஜி.எஸ்.டி. முறை சற்று பலவீனமாகத்தான் காணப்படுகிறது. அதனை நிறைவேற்றும் முறையில் சரிசெய்ய வேண்டியவை உள்ளன. நடப்பாண்டில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.