டெல்லி: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மானிய தொகையை செலுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள அவர் அதற்காக இந்தியா திரும்புகிறார்.
வரப்போகும் வரிச்சலுகைகள்
தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்வதற்காக ஏராளமான திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தள்ளுபடியாகும் வட்டி
குறிப்பாக வட்டி தள்ளுபடி, வருவாய் தரும் திட்டம், கடன் அளிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரும் காலங்களில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் வாக்குகளைக் கவர சலுகைகளை அறிவிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
உதவித்தொகை உயருகிறது
தற்போது ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. அதனை ரூ.800 ஆகவும், 80 வயதுக்குட்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.1200 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
அதிகரிக்கும் செலவு
இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்குவது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறுமென்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
70 ஆயிரம் கோடி
உரம் உள்ளிட்ட வோளாண் பொருள்களுக்கான மானியங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார்.
மானியத்தொகை
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானிய தொகையை செலுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதன் மூலம் புத்தாண்டு முதல் மார்ச் 31 வரை 3 மாதங்களுக்கு கணக்கிடப்பட்டு மானியத் தொகை முழுவதும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதே அளவுக்கான மானியம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமாளிக்க சலுகை
விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சியினரும் விவசாய சங்கங்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனை சமாளிக்கும் வகையில் விவசாயிகளின் நலனுக்காக இதனை செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
உச்சவரம்பு உயருமா?
நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது உள்ள தனிநபர் வருமான வரி உச்சவரம்பான இரண்டரை லட்சம் ரூபாயை 5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.