"மிக பெரிய கார்ப்பரேட்டுகளை அமெரிக்கா சுக்கு நூறாக உடைப்பது தான் வரலாறு" சொல்வது ரகுராம் ராஜன்..!
உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டுக் கூட்டம் சுவிட்சர்லாந்தில் ஜனவரி 21 முதல் ஜனவரி 25 வரை நடை பெறுகிறது. அந்தக் கூட்டத்தில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிசினஸ் மேன்களும், பொருளாதார வல்லுநர்களும் முகாமிட்டு உலகப் பொருளாதாரப் பிரச்னைகள் மற்றும் தீர்வுகளைப் பற்றிப் பேசி வருகிறார்கள்.
நேற்று
ஜனவரி 22, 2019, செவ்வாய்க் கிழமை அன்று இந்தியாவின் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் பேசி இருக்கிறார். வழக்கம் போல உலகம் முன்பு ஒரு திடுக்கிடும் கேள்வியை எழுப்பி அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறார். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைப் பார்த்து பயப்பட வைத்திருக்கிறார். இனி ரகுராம் ராஜன் மொழியில்
இலவசம்
பிசினஸை வளர்க்க வேண்டும் என்கிற பெரு நிறுவனங்களின் கனவுகளை நினைவாக்க அவர்கள் உழைக்கும் போது, சந்தையைப் பிடிக்க முயற்சிக்கும் போது, வாடிக்கையாளர்களுக்குப் பல சேவைகள் இலவசமாக கிடைக்கின்றன அல்லது மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.
உதாரணம்
அதற்கு சிறந்த உதாரணம் கூகுள். இன்று இணைய வெளியில் பல்வேறு சேவைகளை இலவசமாக உலகம் முழுக்க உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் டிரைவ், கூகுள் ஷீட்ஸ், கூகுள் ஸ்லைட்ஸ், கூகுள் கீப்... இப்பை சேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
என்ன எடுக்கிறார்கள்..?
பொருளாதாரத்தைப் பொருத்தவரை எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. ஆக நமக்கு இலவசமாக வழங்கப்படும் சேவைகளுக்கு யார் பணம் செலுத்துகிறார்கள் எனப் பார்க்க வேண்டி இருக்கிறது. அதாவது நமக்கு இலவசமாக சேவைகளை வழங்கும் செலவுகளை வேறு எங்கோ கிடைக்கும் வருவாய் மூலம் ஈடு செய்து லாபம் பார்க்கிறார்கள். அது எங்கே எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
யாருக்கு பலம் அதிகம்
இப்படி பெரு நிறுவனங்களை தங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் போது உண்மையாகவே நாட்டை அல்லது உலகத்தை நிர்வகிக்கும், ஆளும் பலம் யாரிடம் உள்ளது எனத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்போது சொல்லுங்கள் நம்மை ஆள்வது அரசாங்கங்களா..? அல்லது பெரு கார்ப்பரேட் நிறுவனங்களா..?
கார்ப்பரேட்
இன்று பெரு நிறுவனங்கள், அளவு கடந்து மிக மிகப் பெரிய நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. அதை நிர்வகிக்க கார்ப்பரேட் தலைவர்கள் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு அரசும் அந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்த
சிரமப்படுகிறது.
உலக மாற்றம்
உலக அளவில் கடந்த 2018-ல் நடந்த மிகப் பெரிய நிறுவனங்களின் கையகப்படுத்துதல் மற்றும் இணைப்புகள் (Acquisition and Merger) மூலம் உலக தொழிற்துறையே பெரிய மாற்றங்களை எதிர் கொண்டு வருகிறது. அதற்கு தகுந்தாற் போல பிசினஸும் தன்னை வலைத்துக் கொள்கிறது.
இவர்களும்
பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைவர் பிரைன் டி மொய்ன்ஹன், கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ரூத் போரட், ப்ளாக் ஸ்டோன் குழுமத்தின் முதன்மைச் எயல் அதிகாரி ஸ்டீஃபன் போன்றவர்களும் இந்த விவாதங்களில் கலந்து கொண்டார்கள்.
பெரு நிறுவன தரம்
Sinochem என்கிற சீன நிறுவனத்தின் சார்பாக பேசிய நிங் காமிங் (Ning Gaoming) "ஒரு நிறுவனம் பெரு நிறுவனமாக மாறுவதால் தரம் அதி பயங்கரமாக உயரும். உதாரணமாக சீனாவில் சில வருடங்களுக்கு வரை பீரின் சுவை மிக மோசமாக இருக்கும். ஆனால் இன்று மொத்த சினாவில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பீர் தயாரிக்கின்றன. அந்த நான்குமே பெரு நிறுவனங்கள். இப்போது சீன பீர்களின் சுவை சர்வதேச தரத்துக்கு இருக்கிறது" என்றார்.
அமெரிக்க வரலாறு
அதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன் "அமெரிக்க பொருளாதார வரலாற்றில் நிர்வாகிகளால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு வளர்ந்த பெரு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு கட்டுப்படாத நிறுவனங்களோடு என்றுமே சுமூகமாக இருந்ததில்லை. இந்த கதை 1930-லேயே தொடங்கிவிட்டது. இப்படி அசுர வளர்ச்சி காணும் பெரு நிறுவனங்கள் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு, சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று சீனா தனியாக உலகப் பொருளாதாரத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது" என்றார்.