பாரிஸ்: பொதுத் தரவுகள் பாதுகாப்பு நெறியாண்மை' (General Data Protection Regulation) என்ற புதிய சட்டம் ஐரோப்பாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. டேட்டா தனியுரிமை விதிகளை மீறியதாக கூகுள் நிறுவனத்தின் மீது பிரான்ஸ் அரசு ரூ.4,62,49,03,172 கோடி அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் ஐரோப்பாவின் பொது தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடு விதிகளை மீறியதைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜிடிபிஆர் என்பது முற்போக்கான வரைவு. தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மிகச் சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொழில் துறைக்கும் அரசுக்கும் தேவைப்படும் தகவல்களை மட்டும் வடிகட்டித் தரும் வகையில் உள்ளது. தனிப்பட்ட தகவல்கள் எங்கெல்லாம் அவசியமோ அங்கு மட்டும் தரப்படவும், அதுவும் அதனால் தனிநபர்களுக்குக் கிடைக்கக்கூடிய பலன்களுக்குப் பொருத்தமான அளவில் மட்டுமே இருக்குமாறும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஏதேனும் வழக்கு வந்தாலும் நீதிமன்றங்கள் இச்சட்டத்தை அமல்படுத்துவதும், நியாயம் வழங்குவதும் எளிது. அது மட்டுமல்ல, திரட்டப்படும் தரவுகள் எங்கே, எப்படிச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்று வெளிப்படையாக அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எனவே தன்னைப் பற்றி திரட்டப்பட்ட தகவல்கள் எங்கு, எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதைத் தனிநபர்கள் அவ்வப்போது தெரிந்துகொள்ளும் வகையிலேயே நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மே 25 முதல் இந்த சட்ட விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. சேகரித்துள்ள விதிகளை பயனர்கள் பார்க்கவும், அழிக்கவும் நிறுவனங்கள் செய்யாத போதும் 23.5 மில்லியன் டாலர்கள் அல்லது லாபத்தில் 4 சதவிகிதம் அபராதம் கட்டவேண்டியிருக்கும். அடிப்படை மனித உரிமை என ஐரோப்பிய யூனியன் இதனை வரையறுத்துள்ளது. ஐரோப்பாவைத் தாண்டி செயல்படும் அமெரிக்க நிறுவனங்களையும் ஜிடிபிஆர் விதிகள் கட்டுப்படுத்தும்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாடு கூகுள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.462 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனரின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தனிப்பட்ட முறையில் பிரத்யேக விளம்பரங்களை வழங்க வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை நெறிப்படுத்தும் வகையில் உலகில் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைப்பாக ஜிடிபிஆர் இருக்கிறது. இந்த அமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பது பற்றிய விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றதா என்பதை கவனிக்கிறது. ஐரோப்பியா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கூகுள் தனது தளத்தில் மாற்றம் செய்திருந்தாலும், பிரான்ஸ் மேற்கொண்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என ஜிடிபிஆர் தெரிவித்துள்ளது. கூகுள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு மற்றும் அபராதம் பற்றி கூகுள் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
நம்பிக்கை தவறிய கூகுள்
கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படுவது ஒன்றும் புதிய விசயமில்லை. இதேபோல கடந்த பிப்ரவரியில் இந்திய ஆன்லைன் தேடல் சந்தையில் தன்மேலுள்ள நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் முறை தவறிய தொழில் உத்திகளை கையாண்டதாக கூகுள் நிறுவனத்துக்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.136 கோடி அபராதம் விதித்தது. 2012ம் ஆண்டு மேட்ரிமோனி. காம் மற்றும் சியூடிஎஸ் போன்ற நிறுவனங்கள், கூகுள் நிறுவனம் தனது விளம்பர சேவைகளை தவறாக பயன்படுத்துவதாகவும், தன்னுடன் கூட்டுறவில் உள்ள நிறுவனங்களைப் பற்றிய தகவல்களுக்கு முன்னுரிமை தருவதாகவும் கூறி கூகுள் எல்எல்சி, கூகுள் இந்தியா, கூகுள் அயர்லாந்து நிறுவனங்களுக்கு எதிராக போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அபராதம்
கடந்த ஆண்டு ஆண்டிராய்ட் செல்போன் தயாரிக்கும் போது, அதில் கூகுள் அப்ளிகேசன் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கட்டாயபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்,ஐரோப்பிய ஒன்றியம் கூகுள் நிறுவனத்திற்கு 34 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றிலேயே ஒரு நிறுவனத்தின் மீது விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகை இது.ஆண்டிராய்ட் செல்போனை வாங்கும் போதே கூகுள் அப்ளிகேசன் அதில் இடம் பெற்றிருக்கும். இது மற்ற நிறுவனங்களை பாதிப்பதாகவும், நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டிகான வாய்ப்பை குறைப்பதாகவும் கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மக்களுக்கு கூடுதல் வசதிகளை தான் கூகுள் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும், அமெரிக்க நிறுவனங்களை தான் குறி வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.