டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டு முறைதான் நடைமுறையில் உள்ளது. இம்முறையை மாற்றி ஜனவரி முதல் டிசம்பர் வரையில் ஒரு நிதியாண்டாக மாற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தப் புதிய நடைமுறை குறித்து அறிவிப்பு வெளியாகும்
நிதியாண்டை மாற்றுவதற்கான முயற்சியில் பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஈடுபடத் தொடங்கிவிட்டது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள 2016ஆம் ஆண்டில் உயர்மட்டக் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. தற்போது இந்தக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம் பகலில் மாற்றம் செய்யப்பட்டது. மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதே போல தற்போது நிதியாண்டை மாற்றுவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. நிதியாண்டு முறையில் உடனடியாக மாற்றம் கொண்டு வரப்படும் பட்சத்தில் பல்வேறு துறைகளில் அது விளைவுகளை ஏற்படுத்தும்.
150 ஆண்டுகால நடைமுறை
இப்போது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலமான 1867ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த 150 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் நிதியாண்டு நடைமுறையை ஜனவரி - டிசம்பருக்கு மாற்றினால், நவம்பரில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். மேலும், மத்திய அரசைப் பின்பற்றி மாநில அரசுகளும் புதிய நிதியாண்டு நடைமுறைக்கு மாறும்.
பொருளாதார சீர்திருத்தங்கள்
இந்தியா நீண்ட காலமாக தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி வருகிறது. இதிலிருந்து மீண்டு வர பல்வேறு பொருளாதார சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக தற்போது பின்பற்றி வரும் ஏப்ரல் - மார்ச் நிதியாண்டு நடைமுறையை ஜனவரி - டிசம்பர் ஆக மாற்ற மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி கூறியிருந்தார்.
நிதியாண்டு மாற்றுவதால் வசதி
ஜனவரி - டிசம்பர் ஆக மாற்றுவது குறித்து ஆராய, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. நிதியாண்டு மாற்றம் குறித்து பேசிய சங்கர் ஆச்சார்யா, மத்திய, மாநில அரசுகளின் நிதியாண்டு, ஏப்ரல் - மார்ச் ஆக உள்ளது. வேளாண் துறையில், ஜனவரி - மார்ச் வரை ரபி பருவமும், ஏப்ரல் - அக்டோபர் வரை, காரிஃப் பருவமும், ஜூலையில் அறுவடை துவக்கம் என்ற நடைமுறையும் உள்ளன. இதன் அடிப்படையில் நிதியாண்டை மாற்றுவதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் ஆராயப்பட்டன. முடிவில், நிதியாண்டை ஜனவரி - டிசம்பர், ஆக மாற்றுவதில் உள்ள பல்வேறு வசதிகளைக் கருத்தில் கொண்டு அதைச் செயல்படுத்த மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளோம் என்று கூறினார்.
மோடி கூறிய கருத்து
வேளாண் பருவ காலங்களைக் கருத்தில் கொண்டு நிதியாண்டு மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியமாக உள்ளது என்று மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக்கின் நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடியும் கூறியிருந்தார். மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வது சிரமத்தை உண்டாக்கும் என்பதால், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அடுத்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். அதற்கான ஆவணங்கள் அச்சிடும் பணி ஜனவரி 21ஆம் தேதி தொடங்கிய நிலையில், புதிய நிதியாண்டு முறை அமல்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் நிதியாண்டு
ஆஸ்திரியா, பிரேசில், சீனா, ஜெர்மனி, கிரீஸ், இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 156 நாடுகளில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நிதி ஆண்டு கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவும் அப்பட்டியலில் விரைவில் இணையவிருக்கிறது.