டெல்லி: வருமானத்தை விட வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்காக வாங்கிய கடனுக்கு செலுத்தும் வட்டி அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பட்ஜெட்டை செல்லரித்துப் போகச் செய்வதே கடன் சுமைதான். வாங்கிய கடன் மற்றும் அதற்கு கட்ட வேண்டிய வட்டி, புதிய திட்டங்களுக்கு வாங்கும் புதிய கடன் இதனால் நாளுக்கு நாள் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் மட்டும் வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களுக்கு செலுத்திய வட்டியானது ஒட்டு மொத்த பட்ஜெட் மதிப்பீட்டு செலவுகளில் நான்கில் ஒரு பங்காகும். கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டு பட்ஜெட்டில் கடன்களுக்கான வட்டியாக சுமார் 6.24 லட்சம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படும் என்று உத்தேசமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரையிலும் 92 சதவிகிதம், அதாவது சுமார் 5.75 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு வருத்தத்திற்குறிய விஷயம், நடப்பு 2018-19 ஆம் நிதியாண்டில், மக்கள் நலத் திட்டங்களுக்காகவும், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும், வெளிநாடுகளிடம் இருந்து பெறவேண்டிய கடனைக்காட்டிலும் கூடுதலாக 18 சதவிகிதம் வரையிலும் வாங்கியாகிவிட்டது. அதுவும் இந்தக் கடன்களை எல்லாம் வெறும் 8 மாதத்திலேயே வாங்கிப் போட்டாகிவிட்டது.
கடன் சுமை எவ்வளவு
மோடி அரசின் 4.5 வருட ஆட்சியில் கடன் பெறுவது மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 48 லட்சம் கோடியாக இருந்த மொத்த கடன் மதிப்பு 73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பொதுக் கடனில் 51.7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டுக் கடன் 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும் சந்தை கடன் 47.5 சதவிகிதம் உயர்ந்து 52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
வட்டி எவ்வளவு
கடன் தானே, நம்மளா கட்டப்போறோம், ஏமாந்த இளிச்சவாயன்களான ஒட்டுப்போட்ட மக்கள்தானே. அதனால சும்மா கிடைத்த வரைக்கும் லாபம் என்று வாங்கிப் போடுவோம் என்று நம்மை ஆளும் அரசுகள் நினைப்பதால் தான் ஆண்டுதோறும் வாங்கும் கடனும் அதற்கு கட்டும் வட்டியும் கூடிக்கொண்டே செல்வதுதான். இந்த கடனுக்கெல்லாம் செலுத்தும் வட்டியானது நம்முடைய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட ஒட்டு மொத்த செலவுகளில் நான்கில் ஒரு பங்கு என்பதுதான் கொடுமையான காமெடி.
இலவசத்திற்காக கடன்கள்
மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் இலவசங்களை வாரி வழங்குகின்றன. அத்தோடு நாட்டின் உள்கட்டமைப்புக்குத் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியையும் பிற நாடுகளிடம் இருந்தும், ஐஎம்எஃப் என்னும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும் வட்டிக்கு கடன்களை ஆண்டு தோறும் வாங்கிக் குவிப்பது வாடிக்கையான ஒன்று.
கடனுக்கு செலுத்தும் வட்டி
மத்திய அரசு வாங்கும் கடன்களுக்கு எல்லாம் கட்டும் வட்டியானது ஆண்டு தோறும் கூடிக்கொண்டே செல்வதுதான் மிகவும் கவலைப்படும் விஷயமாகும். நடப்பு நிதி ஆண்டில் மட்டும் வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களுக்கு செலுத்திய வட்டியானது ஒட்டு மொத்த பட்ஜெட் மதிப்பீட்டு செலவுகளில் நான்கில் ஒரு பங்காகும்.
கடனாளியாக்கும் ஆட்சியாளர்கள்
மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது கடைசி ஆண்டு காலத்தில் ரூ. 4.57 லட்சம் கோடி கடன் வாங்கியது. இதில் ரூ. 4.27 லட்சம் கோடி தொகை வாங்கிய கடனுக்கான வட்டிக்காக அளிக்கப்பட்டது. பாஜக ஆட்சி நடைபெறும் இந்த காலகட்டத்தில் கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டு பட்ஜெட்டில் கடன்களுக்கான வட்டியாக சுமார் 6.24 லட்சம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படும் என்று உத்தேசமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரையிலும் 92 சதவிகிதம், அதாவது சுமார் 5.75 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட்டில் செலவு எவ்வளவு
இந்தியாவின் கடன் சுமை அதிகரித்ததற்கு பல காரணங்கள் உள்ளன. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடன் வாங்கியுள்ளன. மத்திய அரசு கட்டமைப்பு திட்டங்களுக்காக கடன் வாங்கியுள்ளது. உணவு, எரிபொருள், உரமானியத் துக்கு இந்திய அரசு அதிகம் செலவிடுகிறது. ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் பட்ஜெட்டில் 30 சதவீதம் ராணுவத்துக்கு செல்கிறது. கடனுக்கான வட்டி செலுத்த 25 சதவிகிதம் போய்விடுகிறது. இதனால் சுமார் 45 சதவிகித பட்ஜெட் தொகைதான் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்குள்ளாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை கவனித்தாக வேண்டியுள்ளது. இது தவிர பல இடங்களில் விரயம் மற்றும் ஊழலில் பெருமளவு தொகை கரைகிறது. கடன் பொறியிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் அரசு வருமானத்தை அதிகரித்து செலவுகளைக் குறைக்க வேண்டும். வரவு எட்டணா.... செலவு பத்தனா... கடைசியில் துந்தணா என்று மக்களை பாட வைத்து விடுவார்கள் போல.