டெல்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அடுத்த வாரம் ரூ. 1,500 கோடி விடுவிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் பல ஆண்டுகளாக கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை மட்டும் ரூ.55,000 கோடியாக இருக்கிறது. கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்கும் நடவடிக்கையாக ரூ.1,500 கோடியை அளிக்க மத்திய அரசு முன் வந்துள்ளது.
துணை மானியக் கோரிக்கையில் ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்க ரூ. 2,345 கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித் தது. இதையடுத்து அடுத்த வாரம் ரூ. 1,500 கோடி விடுவிக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமையிலிருந்து ரூ.29 ஆயிரம் கோடி ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் சுமை ரூ.55 ஆயிரம் கோடியாகும்.
நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியிலிருந்த போதே மேற்கொள்ளப்பட்டது. ரூ. 30,231 கோடியை இதுவரை மத்திய அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தை சீரமைக்க 10 ஆண்டு அடிப்படையிலான முதலீட்டு திட்டம் உருவாக்கப் பட்டு, அந்த நடவடிக்கையானது 2012-ம் ஆண்டில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.