அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய சேவைகளை காரில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இனி செல் போன்களில் என்ன எல்லாம் செய்ய முடியுமோ அவைகளை காரிலும் செய்யல்லாமாம்.
சிம் விற்பனை
இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா மோடார்ஸுக்கு 5 லட்சம் சிம் கார்டுகளை விற்பனைச் செய்திருக்கிறது. இந்த சிம் கார்டுகள் மூலம் மாதம் குறைந்த பட்சம் 20 ரூபாயாவது வருவாய் கிடைக்கும். எனவே கார்களுக்கான சிம் கார்டுகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 1200 கோடி வருவாய் ஈட்ட இருக்கிறது பிஎஸ்என்எல்.
என்ன ஸ்பெஷல்
இந்த சிம் கார்டுகள் வருங்கால ஐந்தாம் தலைமுறை அலைக் கற்றைகளிலும் இயங்கக் கூடிய விதத்தில் வடிவமைத்திருக்கிறார்களாம். இந்த ரக சிம் கார்டுகளை எம் 2 எம் (Machine 2 Machine sim) என்கிறார்கள். இந்த ரக சிம் கார்டுகளை டியாகோ, ஹெக்ஸா, புதிய ஹாரியர் ரக கார்களில் முதலில் பொருத்த இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
ஐ ஓ டி - Internet of Things
இனி இணையம் இல்லாமல் உலகம் இயங்கவே இயங்காது. பேன் போட வேண்டுமா இணையம் தேவை, கார் ஓட்டணுமா இணையத்தின் உதவி என அனைத்தும் இணையத்தை நம்பி ஓட வேண்டி இருக்கும். எனவே 2021-ல் இந்த ஐஓடியால் மட்டும் டெலிகாம் நிறுவனங்களுக்கு நான்கு பில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.
கார்களுக்கு ஏன்..?
இப்போது ஜிபிஎஸ் மட்டும் தான் பெரும்பாலான கார்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இனி நாம் பயணிக்கும் பாதைகளில் உள்ள சாலை நெரிசல், கால நிலை என அனைத்தையும் பார்க்கலாம். ஒரு வைஃபை ரவுட்டர் இல்லாமல் ஒரு போனில் இணையத்தில் விவரங்களைத் தேடுவது போல இனி கார்களில் தேடலாம். அதற்குத் தான் இந்த ஒப்பந்தங்கள் என டாடா மோட்டார்ஸ் சொல்கிறார்கள்.
டாடா மோட்டார்ஸ் நிலை
மாருதி சுஸிகி, டாடா மோட்டார்ஸ், ஹியூண்டாய், மஹிந்திரா ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டும் இந்திய சந்தையில் 85 சதவிகித சந்தையை வைத்திருக்கிறார்கள். இதில் மாருதி சுஸிகி 50.74%, ஹியூண்டாய் 17.83% சந்தையை கைக்குள் வைத்திருக்கிறார்கள். டாடா மோட்டார்ஸ் 6.04 % த்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஹியூண்டாய் நிறுவனத்தை முந்தத் தான் இத்தனை பிரயத்தனங்களுமாம்.