முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமாவுக்கு இந்த காசு கேட்டு தொந்தரவு செய்ததும் ஒரு காரணம் என கிட்ட தட்ட உறுதி ஆகிவிட்டது. யார் என்ன சொன்னாலும் சரி, யார் எப்படி ராஜினாமா செய்து கொண்டாலும் சரி எனக்கு காசு வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது மத்திய அரசு. ஆனால் புதிய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸோ மத்திய அரசுக்கு ஈவுத் தொகை தருவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பசப்பலாகச் சொல்கிறார்.
நிதிப் பற்றாக்குறை
மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வாய் எதிர் பார்த்த அளவுக்கு வரவில்லை. குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரியில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் குறைவு. இந்த லட்சனத்தில் தான் ஏகப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைத்தது குறைத்தது எல்லாம். அதே போல் மத்திய அரசின் கைவசம் இருக்கும் சொத்துக்களை எதிர் பார்த்த விலைக்கு விற்க முடியாததால் அங்கும் வருமானப் பற்றாக்குறை.
தேர்தல்
இந்த இரண்டையும் சமாளிக்க இப்போது மத்திய அரசுக்கு பணம் தேவை. இந்த பணத்தை கடனாக வாங்கினால் தேர்தல் நேரத்தில் இதை சொல்லியே காங்கிரஸ் காலி செய்து விடும். அதோடு மக்களுகு சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள் எல்லாமே இப்போது தான் முழு வீச்சில் செயல்படுகிறது. எனவே மக்களை தக்க வைத்துக் கொள்ள புதிய வாக்களர்களைக் கவர வருமானத்தை அதிகப்படுத்தியே ஆக வேண்டும்.
உதாரணம்
சமீபத்தில் துருக்கியின் ஆளும் அரசாங்கம் தன் மத்திய வங்கியான Central Bank of the Republic of Turkey இடமிருந்து ஒரு கணிசமான தொகையை பிப்ரவரி மார்ச் மாதங்களில் வாங்கியது. அதை வைத்து தேர்தலையும் சிறப்பாக எதிர் கொண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதனால் எர்டோகன் மீண்டும் அதிபராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இதே சூத்திரத்தை இந்தியாவிலும் நிகழ்த்த மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது.
ஆர்பிஐ நடப்பு
ஒவ்வொரு ஆண்டு ஆர்பிஐ தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ரிசர்வ்களாக வைத்துக் கொண்டு மற்ற தொகையினை அப்படியே அரசுக்கு ஈவுத் தொகையாக கொடுத்து விடும். ஆர்பிஐக்கான நிதி ஆண்டு ஜூலை முதல் ஜூன் வரையான காலத்தைத் தான் நிதி ஆண்டாக கொண்டிருக்கிறது. எனவே ஜூன் மாதம் தன் கணக்கு வழக்குகளை முடித்த பின் தான் அரசுக்கு ஈவுத் தொகை வழங்கப்படும். கடந்த ஜூலை 2018-ல் சுமார் 10,000 கோடி ரூபாயை அரசுக்கு ஈவுத் தொகையாகக் கொடுத்தது ஆர்பிஐ. இப்போது அரசு சுமார் 40,000 கோடி ரூபாயை ஆர்பிஐ-யிடமிருந்து ஈவுத் தொகையாக எதிர்பார்க்கிறதாம்.
அரசு நச்சரிப்பு
ஆர்பிஐ அரசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக முன் கூட்டிய ஈவுத் தொகையாக கொடுக்க வலியுறுத்தி வருகிறதாம். அப்படிப் பணம் கொடுத்தால் மத்திய அரசு தான் சொன்ன படியே நிதிப் பற்றாக்குறையை மொத்த ஜிடிபியில் 3.3 சதவிகிதமாகவே காட்ட முடியும். அப்படி இல்லை என்றால் நிதிப் பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 3.5% ஆக தேர்தல் நேரத்தில் காட்ட வேண்டி இருக்கும் என பயப்படுகிறது பாஜக அரசு.
முன்னாள் துணை ஆளுநர்
"ஆர்பிஐக்கு கொஞ்சம் கூடுதலாக பணம் இருப்பது நல்லது தான் அப்போது தான் அதன் தன்னாட்சி உறுதி செய்யப்படும். அதோடு ஒரு பிரச்னை என்றாலும் உடனடியான நிதி நிலையை சரி செய்து கொள்ள முடியும் அதற்காக குஷன் போல இந்த கூடுதல் பணம் ஆர்பிஐ-யிடம் இருக்க வேண்டும். ஆர்பிஐ-ன் ரிசர்வ்களாக இருப்பது எல்லாமே வெளிநாட்டு பணத்துக்கு இணையான மதிப்புகள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் ரிசர்வுகளின் மதிப்புகள் குறையலாம். அப்படிக் குறையும் போது ஆர்பிஐ-இடம் கூடுதலாக பணம் இல்லை என்றால் மொத்த நாட்டின் பொருளாதாரமும் ஸ்தம்பித்து விடும் என முன்னாள் ஆர்பிஐ துணை ஆளுநர் ஆர். காந்தி எச்சரித்திருக்கிறார்.