டெல்லி: எளிதில் வங்கிக்கடன் கிடைக்க வசதி செய்ய வேண்டும், ஜிஎஸ்டியில் ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். வரிச்சலுகைகளும் வரி விடுமுறையும் அறிவிக்க வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீர் என்று உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பணமதிப்பு நீக்கத்தாலும் டிஜிட்டல் இந்தியாவாக உருவெடுத்த பின்னர் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல தொழிற்சாலைகள் தள்ளாடின. சில மீண்டு வந்த நிலையில் ஜிஎஸ்டி வரியால் அடுத்த அடி விழுந்தது. அவ்வப்போது கொண்டு வரப்படும் சிறு மாற்றங்கள் இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை.
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் மேலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிறு குறு தொழில்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரைக்கும் தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடன் தருமா வங்கிகள்
வங்கிகள் வாராக்கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளன. படிப்படியாக மீண்டு வரும் நிலையில் நுண் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மைக்ரோ மற்றும் மேக்ரோ நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இடைக்கால பட்ஜெட்
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள பியூஷ் கோயல் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை சில தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார். அப்போது சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் கடன் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சமீபத்தில் பொதுத் துறை வங்கிகளுக்கு வந்த லாபம், அனைத்து மட்டங்களையும் சென்றடையும் வகையில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
கடந்த நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி 59 நிமிட கடன் வழங்கும் திட்டம், தொழிலாளர் சட்டங்களில் சலுகைகள், சுற்றுச்சூழல் விதிமுறைகளில் தளர்வு, மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எளிதில் தொழில் நடத்த ஏதுவாக நிறுவனச் சட்டங்களில் மாற்றங்கள் என்று புதிய சலுகைகளை அறிவித்தார். ஜிஎஸ்டியில் பதிவு செய்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய போர்ட்டல் மூலம் 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் கூறினார் பிரதமர் மோடி. இந்த அறிவிப்பு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரித்தது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கடன் வசதி நிதி சேவைகள் பிரிவில் பெரும் மாற்றத்தை கொண்டு வரக்கூடியது என ஒமிடியார் நெட்வொர்க் மற்றும் பிசிஜி அறிக்கை தெரிவிக்கிறது. இது ஸ்டார்ட் அப் மற்றும் வங்கிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கடன், 2023 வாக்கில், 10 முதல் 15 மடங்கு அதிகரித்து ஆண்டுக்கு ஆறு முதல் ஏழு லட்சம் கோடி வரை விநியோகிக்கப்படலாம் என தெரிவிக்கிறது எனவே இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் கடன் வழங்கும் துறையில் அதிக பணத்தை ஒதுக்கீடு செய்வதை அரசு பரிசீலிக்கக்கூடும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.