உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்க இறக்குமதியாளர் இந்தியா தான். 2018-ல் தங்கத்தின் இறக்குமதி 1.4 சதவிகிதம் சரிந்து 760 டன்னாக இருக்கிறது. ஆனால் இனி வரும் ஆண்டுகளில் மீண்டும் தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகரிக்கும் எனச் சொல்கிறார்கள்.
காசு எங்கிருந்து வருது
தேர்தல் என்றால் செலவுகள் என்று தான் பொருள். இப்போது மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் நிறைய பணம் புழங்கும். பணப் புழக்கம் என்றால் ஒருவருக்கு செலவு, மற்றவருக்கு வருமானம் தானே. ஆக 2019-ம் ஆண்டிலேயே தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகரித்து சுமார் 850 டன் வரை அதிகரிக்கும் எனச் சொல்கிறார் உலக தங்க சங்கத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் சோம சுந்தரம்.
அவர்கள் வெற்றி எங்கள் தோல்வி
பாஜக அரசுக்கு தன் நடப்புக் கணக்கு பற்றாக் குறையை சரி செய்ய தங்க இறக்குமதியை குறைக்க வேண்டி இருந்தது. தங்க இறக்குமதி குறைய வேண்டும் என்றால், தங்கத்துக்கான தேவையே இந்தியாவில் குறைய வேண்டும். எப்படியோ அடித்துப் பிடித்து பாஜக அரசு தான் நினைத்த படியே தங்கத்துக்கான தேவையை இந்தியாவில் குறைத்துவிட்டது. அதனால் தான் கடந்த ஆண்டுகளில் தங்க இறக்குமதி தொடர்ந்து இறக்கத்திலேயே இருந்தன.
எண்களில் தங்கம்
கடந்த 2018 அக்டோபர் டிசம்பர் காலாண்டில் தங்கத்துக்கான தேவை 2.3 சதவிகிதம் குறைந்து வெறும் 236.5 டன்னாகத் தான் இருந்தது. தங்க இறக்குமதி 26 சதவிகிதம் சரிந்து 168.3 டன்னாக இருக்கிறது. ஒட்டு மொத்தமாக 2018-ல் 14 சதவிகிதம் சரிந்து 756.8 டன் மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.
ஆர்பிஐ வாங்கிய தங்கம்
ஆனால் அதே 2018-ல் மத்திய ரிசர்வ் வங்கி 2018 மார்ச் தொடங்கி பல தவணைகளில் தங்கத்தை வாங்கிக்குவிக்கத் தொடங்கியது. ஆர்பிஐ மட்டும் சுமார் 40.5 டன் தங்கத்தை ரிசர்வ்வாக வைத்திருக்கிறது. மிக முக்கியமாக கறுப்புச் சந்தையில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் வரவுகளும் 90 - 95 டன்னாக குறைந்திருக்கிறதாம். இதற்கு முந்தைய ஆண்டில் கறுப்புச் சந்தையில் இருந்து சுமாராக 115 - 12 டன் தங்கம் சந்தைக்குள் வந்ததாம்.