மீண்டும் ஆர்பிஐ வங்கியை தொடர்ந்து நச்சரிக்கத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. மத்திய அரசு தன் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க யாரை வேண்டுமானாலும் சுரண்டிப் பிழைக்கத் தயாராக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
இன்று அறிவித்த பட்ஜெட்டில் எல்லாவற்றையும் சந்தோஷமாகச் சொன்ன பியுஷ் கோயல் 2018 - 19 நிதியாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட 3.3 சதவிகித நிதிப் பற்றாக்குறை அளவைத் தாண்டி செல்வதை மட்டும் சந்தோஷமாகச் சொல்லவில்லை. அவர்கள் கணிப்பைத் தாண்டி விட்டது உண்மை ஆனால் புதிதாக கணித்திருக்கும் 3.4 %-க்குள் இந்த நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறையை அடக்க போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காகத் தான் விடாமல் ஆர்பிஐ நிறுவனத்தை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே 2018 - 19 நிதி ஆண்டுக்கு ஈவுத் தொகை (Dividend) மற்றும் இடைக்கால ஈவுத் தொகையாக (Interim Dividend) ஆக சுமார் 40,000 கோடி கொடுத்துவிட்டதாம். இப்போது மேலும் 28,000 கோடி ரூபாயை இடைக்கால ஈவுத் தொகையாக எதிர்பார்க்கிறதாம்.
இதை பொருளாதார விவகாரத் துறையின் செயலர் மற்றும் ஆர்பிஐ இயக்குநர் குழுவில் ஒருவரான சுபாத் சந்திர கார்கே பத்திரிகைகளுக்கு தைரியமாகப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அப்படி ஒருவேளை ரிசர்வ் வங்கி மத்திய அரசின் பேச்சைக் கேட்டு கொடுத்தால் 2018 - 19 நிதி ஆண்டுக்கு மட்டும் 68,000 கோடி ரூபாய் கொடுத்ததாக கணக்கு வரும். இது இந்திய ஆர்பிஐ வரலாற்றிலேயே பெரிய தொகையாம்.