டெல்லி: மத்திய அரசு இன்னொரு முறை டிமானிடைசேஷன் கொண்டு வரட்டும், அப்போதுதான் இந்தியாவின் ஜிடிபி மேலும் முன்னேறும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டை முன்னிட்டு மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.
லோக்சபாவில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. இன்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது.
கடைசி நான்கு மாதங்களுக்கான பட்ஜெட் ஆகும் இது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பின்மை
மத்திய அரசு நேற்று 2017-2018ம் ஆண்டிற்கான இந்திய உள்நாட்டு உற்பத்தியை 6.7ல் இருந்து 7.2 ஆக திருத்தியது. இதை சுட்டிக்காட்டிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மோடி அரசு இந்திய ஜிடிபியை உயர்த்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நாட்டில் ஜிடிபி உயரவில்லை, வேலைவாய்ப்பின்மைதான் உயர்ந்து இருக்கிறது.
நிதி ஆயோக் பேச்சு
நிதி ஆயோக்கின் துணை தலைவர் ''வேலைவாய்ப்பு இல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி 7 சதவிகிதத்தை தொட முடியும்?'' என்று கேட்டு இருக்கிறார். அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் 45 வருடத்தில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் போது எப்படி ஜிடிபி 7 சதவிகிதத்தை தொட்டது? என்று ப.சிதம்பரம் கேட்டு இருக்கிறார்.
இன்னொருமுறை
ப.சிதம்பரம் இன்னொரு டிவிட்டில், பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதுதான் இந்தியாவின் ஜிடிபி 8.2 % ஆக இருந்தது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் இன்னொரு டிமானிடைசேஷன் கொண்டு வரட்டும். இந்த முறை 100 ரூபாய் நோட்டுக்களை அழித்தொழிப்போம் என்று ப.சிதம்பரம் கிண்டலாக தெரிவித்து இருக்கிறார்.
என்ன காரணம்
2017-2018ன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.2 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. முதலில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-2018ல் மொத்தம் 6.7 சதவிகிதமாக இருந்தது என்று கூறியது. அதை மாற்றி நேற்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதைத்தான் ப.சிதம்பரம் தற்போது கிண்டல் செய்துள்ளார்.