டெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கடந்த சில வருடங்களாக மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வேத்துறை குறித்த முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியானது.
பியூஷ் கோயல் அதில், நாடு முழுக்க ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும். எல்லா இடங்களிலும் ரயில்வே கிராசிங் கண்காணிக்கப்படுகிறது.
ரயில்வே துறையின் வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதுவரை எந்த வருடமும் இல்லாத அளவிற்கு வருவாய் அதிகரித்து இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கான முதலீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ரயில்வே துறைக்கு மொத்தமாக 64,587 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.