டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் லோக்சபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயலால் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் ஆரம்பித்ததும், சுமார் 20 நிமிடங்களுக்கு அரசின் நான்கரை ஆண்டு கால சாதனைகளை வரிசையாக அடுக்கிப் பேசினார் பியூஷ் கோயல்.
இதன்பிறகு, தனது பட்ஜெட் உரையில், நடுத்தர வர்க்கத்தினரையும், விவசாயிகளையும் கவரும் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் என்பது, பொது பட்ஜெட்டைபோல பல புதிய அறிவிப்புகளை கொண்டிருந்தது. அதில் பல கோடி பேரை சென்றடைய கூடிய டாப் 3 அறிவிப்புகளை பார்க்கலாம்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு
இதுவரை ரூ.2.50 லட்சம் வரையிலான தனி நபர் ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்டது. 2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் மீது 5 சதவீதம், வருமான வரி விதிக்கப்பட்டு வந்தது. இப்போது தனி நபர் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரையில் உள்ளோருக்கு இனி வரி கிடையாது. இதனால் 3 கோடி பேர் பலனடைவார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்கத்து, மாத சம்பளம் பெறுவோருக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். பாஜகவின் வாக்கு வங்கியான மாத ஊதியதாரர்களை இந்த அறிவிப்பு குறி வைத்துள்ளது.
விவசாயிகளுக்கு 6000 ரூபாய்
2 ஹெக்டேர் வரையிலான நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. இதனால் 12 கோடி விவசாயிகள் பலனடையப்போகிறார்கள். நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிடும் என்பதால் பிரச்சினையில்லை.
மெகா ஓய்வூதியம்
அமைப்பு சாரா (ஒருங்கிணைக்கப்படாத) தொழிலாளர்களுக்காக மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதுக்கு மேற்பட்டோர் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.100 செலுத்த வேண்டியிருக்கும். 19 வயதுக்கு மேற்பட்டோர் இந்த திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.55 செலுத்த வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசு செலுத்தும். இதனால் டிரைவர்கள், வீட்டு பணியாளர்கள், பிளம்பர்கள் போன்ற தொழிலாளிகள் பலனடைவார்கள். இதனால், 10 கோடி தொழிலாளர்கள் பலனடைவார்கள்.
100 கோடி பேருக்கு பலன்
ஆகமொத்தம், விவசாயிகளுக்கான நேரடி நிதி வழங்கும் திட்டத்தால், 12 கோடி விவசாயிகளுக்கு பலன் கிடைக்கிறது. தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வால், 3 கோடி பேர் பலனடைவார்கள். மெகா பென்ஷன் திட்டத்தால் 10 கோடி பேருக்கு பலன் கிடைக்கும். அதாவது மொத்தம் 25 கோடி பேர். இதில் கவனிக்க வேண்டியது, இந்த மூன்று துறைகளில் உள்ளோரும் ஒரு திட்டத்தில் பலனடைந்தால் மற்றொரு திட்டத்தால் பலனடைய முடியாதுதான். ஆனால், ஒவ்வொரு பலனாளியின் குடும்பத்திலும் அதிகபட்சம் 4 பேர் இருப்பார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், நேரடியாக பலனடையப்போவோர் எண்ணிக்கை சுமார், 100 கோடி மக்கள். எனவே தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு இது மிகப்பெரிய பூஸ்ட்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.