சென்னை: விவசாயிகளை மனதில் வைத்தே இந்த பட்ஜெட்டின் அறிவிப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டாலும், "அப்படி ஒன்னும் இந்த பட்ஜெட்டால நாங்க சந்தோஷப்படல" என்றுதான் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மண்ணை கவ்வியதற்கு விவசாயிகள் பிரச்சினையே முக்கியக் காரணம் என்பதை உணர்ந்ததாகவும், இதன் தாக்கம் வரும் மக்களவை தேர்தலிலும் ஏற்படாமல் இருக்க பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக முக்கிய சலுகைகளை அறிவிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.
எதிர்பார்த்தபடியே விவசாயிகளுக்கு நிறைய சலுகைகளை அறிவித்துள்ளது. முக்கியமாக அவர்களின் வங்கிக் கணக்கில் 6000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகைகள் மக்கள் மனசில் நீண்ட காலம் தங்கி இருக்காது என்றே தெரிகிறது.
கலியா திட்டம்
ஏனெனில், ஒடிசாவில் கலியா திட்டம் என்ற ஒன்று உள்ளது. அதாவது குறைந்த பட்ச ஆதார விலையாக விவசாயிகளின் பயிர்களின் விலை ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு அம்மாநில விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாகவும், அடிப்படைக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. ஒரு மாநில அரசே இப்படி ஒரு திட்டத்தை விவசாயிகளுக்காக செய்யும்போது, ஆளும் மத்திய அரசால் சிறப்பான புதிய திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
எல்லாருக்கும் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தாதது கூட கோபம் இல்லை, ஆனால் ராகுல் வறுமையை ஒழிக்க அனைவருக்கும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதாக அறிவித்தவுடன், மத்திய அரசும் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது போட்டி மனப்பான்மையை காட்டுவதாக காங்கிரஸ் தரப்பினர் கருதுகிறார்கள்.
கண்துடைப்புதான்
இது குறித்து நம்மிடையே பேசிய சில தமிழக விவசாயிகள், "டெல்லி ரோட்டில் நிர்வாணமாக ஓடி கூட விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்தார்கள். ஆனால் அவர்களை பார்க்ககூட நேரம் இல்லாத மோடி, இப்படி எதற்காக எங்களுக்கு பணத்தை தருகிறார்? இது வெறும் கண்துடைப்புதான், இந்த 6 ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும், இனியும் நாங்கள் ஏமாற தயாராக இல்லை" என்று கொதித்து போய் சொல்கிறார்கள்.
நவீன திட்டம்
விவசாயிகளின் இந்த கேள்வி நியாயமே.. உண்மையும்கூட.. விவசாயிகளின் மேல் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், ஒன்று அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நவீன திட்டத்தை ஏதேனும் அறிவித்திருக்கலாம் அல்லது இருக்கும் வங்கிக்கடனையாவது ரத்து செய்திருக்கலாம்.
முட்டாள் ஆவதா?
ஆனால் இந்த இரண்டில் எதையுமே செய்யாமல் இனாம்களை கொடுத்து கொடுத்து மேலும் மேலும் முட்டாளாக்கி அவர்களின் வறுமையின் நிழலில் குளிர் காய்வதுதான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கான பட்ஜெட் இது கிடையாது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.