கன்னியாகுமரி: தென்மாவட்டங்களில் புதிதாக பாதை அமைக்கும் கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் உட்பட எந்த ஒரு திட்டமும் ரயில்வே பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகாததால் தென் மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பட்ஜெட்டில் தென்மாவட்டங்களில் எந்த ஒரு புதிய பாதை அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வடமாநில பக்தர்கள் வசதிக்காக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ தூரத்துக்கு புதிதாக இருப்புபாதை அமைக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி மதுரை விழாவில் அறிவித்தார்.
தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை இத்துடன் நிறுத்தாமல் இலங்கை வரை நீட்டிக்கும் திட்டமாக செயல் படுத்த வேண்டும் என்றார்.
அதே நேரத்தில் மேலும் பல புதிய ரயில்வே திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கூறி வருகின்றனர். போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் தென்மாவட்ட மக்கள் சென்னை, மும்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகள் ஆங்கிலேயர் காலத்திலே அமைக்கப்பட்டது ஆகும். இந்தியா சுதந்திரம் கிடைத்தது முதல் குமரி மாவட்டம் தவிர உள்ள தென்மாவட்டங்களில் ஒரு கி.மீ தூரம் கூட புதிதாக ரயில்பாதை வழித்தடம் இதுவரை அமைக்கவில்லை.
எனவே, கிழக்கு கடற்கரை ரயில் பாதை, குலசேகரம்பட்டிணம் ரயில்பாதை, கன்னியாகுமரி, காரைக்குடி புதிய ரயில் பாதைகளில் திட்டங்களை செயல் படுத்த வேண்டும். அதே நேரத்தில் ரேட் ஆப் ரிட்டன் என்ற நடைமுறை ரயில்வே துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காரைக்குடி - தூத்துக்குடி, தூத்துக்குடி - கன்னியாகுமரி பாதைக்கு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் உள்ளதால் இந்த திட்டம் செயல் படுத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது. ரயில்வே வாரிய அறிக்கையின் படி இந்த கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டம் ரேட் ஆப் ரிட்டன் குறைவாக இருக்கின்ற காரணத்தால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தென் மாவட்ட பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்து 4 வருட பட்ஜெட்களில் குமரியிலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் இதுவரை இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. தவிர, ஆளுர், செட்டி குளம் ரயில்பாதை, சங்கரன்கோவில் - திருநெல்வேலி புதிய பாதை ஆகிய திட்டங்களும் குறைந்த ரேட் ஆப் ரிட்டன் உள்ள காரணத்தால் ரயில்வே வாரியத்தால் முடக்கம் செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டமும் அறிவிக்கப் படவில்லை.
4 ஆண்டுகளில் தென்மாவட்டங்களுக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மதுரை,கன்னியாகுமரி, கன்னியா குமரி - திருவனந்தபுரம் பாதையை இருவழிபாதையாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.