டெல்லி: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பயன் அடைவார்கள் என்றார்.
50 கோடி பேர் பயன் அடைவர்
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் பயன் அடைவர் என்றும், நடுத்தர வர்க்கத்துக்கு பெரும் பயன் அளிப்பதாக பட்ஜெட் உள்ளதாக கூறினார்.
டிரெய்லர் தான்
இந்த இடைக்கால பட்ஜெட் டிரெய்லர் தான் என்றும், தேர்தலுக்குப் பிறகு இந்தியாவை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்லும் என்றார்.
பிரதமர் மோடி பெருமிதம்
மற்ற மாநில அரசுகளின் கீழ் போடப்பட்ட விவசாய திட்டங்களின் கீழ் 2 முதல் 3 கோடி வரையிலான விவசாயிகள் மட்டுமே பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
9 கோடி குடும்பங்கள் பயனடையும்
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 9 கோடி குடும்பங்கள் பயனடையும் என்றும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டானது நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைவருக்குமானது என்றும் தெரிவித்தார்.