டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கலை 24 மணி நேரத்தில் சரிபார்த்து, தேவைப்பட்டால் ரீஃபண்ட் செய்யும் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் முற்றிலும் மின்னணு மயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த அவர் இதனை தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் வர இருக்கும் நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்யும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏராளமான சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல். 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் வரி வருவாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரியை மக்கள் எளிதில் அணுகும் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் வருமான வரி கணக்கு தாக்கலை 24 மணி நேரத்தில் சரிபார்த்து, தேவைப்பட்டால் ரீஃபண்ட் செய்யும் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் முற்றிலும் மின்னணு மயமாக்கப்படும். நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாதச் சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவில் வருவோரும் தங்களின் ஆண்டு வருமானத்திற்கு உரிய வருமான வரி ரிட்டன்களை ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும். அதேபோல், நிறுவனங்களும் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட (Audit Report) தணிக்கை அறிக்கை மற்றும் வருமான கணக்கையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
வருமான வரி ரிட்டன்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (ஜூலை மற்றும் செப்டம்பர்) தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில் அபராதத்துடன் அடுத்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். வருமானத்திற்கான கூடுதல் வரி ஏதேனும் செலுத்தவேண்டியது இருந்தால் வரிக்கான வட்டியையும் கூடவே செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
மாதச்சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவினரும், நிறுவனங்களும், தங்கள் வருமானத்திற்கு உரிய வரியை விட கூடுதலான வரியை செலுத்தி இருந்தால் உபரி வரியை (Refund) வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும். சில நேரங்களில் 5 மாதம் வரையிலும் கால தாமதம் ஏற்படுவதுண்டு.
கால தாமதம் ஏற்பட முக்கிய காரணமே, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணைய தளமும் (e-filing portal), வரி செலுத்த உதவும் இணையதளமும் (Centalized processing centre) வேறு வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதே ஆகும். தற்போது இ-ஃபைலிங் இணைய தளத்தை டிசிஎஸ் (TCS) நிறுவனமும், சிபிசி(CPC) இணையதளத்தை இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனமும் தனித்தனியே நிர்வகிப்பதே கால தாமதம் மற்றும் உபரி வரிக்கான கூடுதல் வட்டியையும் மத்திய வருமான வரி ஆணையம் இழப்பதற்கு காரணமாகும்.
இனிமேல் உபரி வரியை (Refund) பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிநபர் பிரிவினரும், மாதச் சம்பளம் வாங்குவோரும், நிறுவனங்களும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே தங்களின் உபரி வரியை பெற்றுக்கொள்ள முடியும்.
வருமான வரி ரிட்டன் தாக்கலை எளிமைப்படுத்தியும், ரீபண்ட் வழங்கும் நாட்களை 63 நாட்களி்ல இருந்து ஒருநாளாகக் குறைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கான மென்பொருளைத் தயாரிக்க ரூ. 4,242 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மென்பொருளை இன்போசிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த 18 மாதங்களில் முடிக்கப்படும் இந்த மென்பொருள் 3 மாத சோதனை முயற்சிக்குப் அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த புதிய திட்டம் வருமானவரி செலுத்துதலை இப்போதுள்ள நிலையைக் காட்டிலும் மேலும் எளிமையாக்கும். ஏதேனும் தவறுகள் நடந்தால் விரைவாகச் சரி செய்யும்.
இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரிட்டன் பரிசீலனை செய்வதில் அதிகமான வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை நிலவும், ரிட்டன்களை விரைவாகப் பரிசீலனை செய்ய முடியும், குறிப்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் தலையீடு இல்லாமல் விரைவாக ரிட்டன்கள் பரிசீலிக்க முடியும் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.