இந்த இடைக்கால பட்ஜெட்டில் இந்திய அரசு பல்வேறு விதங்களில் சுமார் 7.03 லட்சம் கோடி ரூபாயை கடனாகப் பெற இருப்பதாகச் சொல்லி இருந்தது.
இந்த 7.03 லட்சம் கோடி ரூபாயில் 90,000 கோடி ரூபாயை பங்குச் சந்தைகள் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று அல்லது அரசு கடன் பத்திரங்களை விற்று கடன் பெறுவதாகச் சொல்லப்பட்டிருந்தது.
நேற்று தான் பட்ஜெட் படித்து முடித்தார். அதற்குள் அரசு அடுத்த நிதி ஆண்டுக்கான வேலைகளை விறுவிறுப்போடு செய்யத் தொடங்கிவிட்டது.
2018 - 19 நிதி ஆண்டில்
கடந்த ஏப்ரல் 01, 2018 தொடங்கி மார்ச் 31, 2019 வரையான நிதியாண்டுக்குள் பங்குச் சந்தைகள் மற்றும் கடன் பத்திரங்கள் மூலம் 80,000 கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது நிதி அமைச்சகம். ஆனால் கடந்த 10 மாதங்களில் (ஏப்ரல் 2018 முதல் ஜனவரி 2019) வரையில் வெறும் 36,000 கோடி ரூபாய் மட்டுமே திரட்டியது. மீதமிருந்தும் 60 நாட்களுக்குள் 44,000 கோடி ரூபாயை திரட்டுவது நடக்காது காரியம் என நிதி அமைச்சக் அதிகாரிகளே கை விரித்துவிட்டார்களாம்.
2019 - 20-ல் சாதிப்போம்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் நடந்தது போல 2019 - 20 நிதி ஆண்டில் நடக்கக் கூடாது என்பதால் இப்போதே அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனங்களின் பங்குகளை எல்லாம் விற்கலாம் என பட்டியலிட்டு 10 நிறுவனங்களை குறித்து வைத்திருக்கிறார்களாம். இந்த 10 நிறுவனங்களை ஒரே இடிஎஃப் (Exchange Traded fund) ஆக அறிவித்து சுமார் 27,000 கோடி ரூபாயை திரட்ட இருக்கிறார்களாம்.
அதானு சக்கரபர்த்தி
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Department of Investment and Public Asset Management (DIPAM) என்கிற துறை தான் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்று பணம் பெறுவது, தன் வசம் இருக்கும் மற்ற பொதுச் சொத்துக்களை விற்று பணம் திரட்டுவது எல்லாம் செய்கிறது. தற்போது இந்த துறையின் செயலராக அதானு சக்கரபர்த்தி தான் வழி நடத்தி வருகிறார். இவரும் அரசு 10 நிறுவனங்கள் மூலம் 27,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட இருக்கும் திட்டத்தை உறுதி செய்திருக்கிறார்.
நிறுவனங்களின் பெயர்கள் இருக்கா..?
மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை Central Public Sector Enterprises - CPSE எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட மத்திய நிறுவனங்களில் ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஆர்இசி, THDCIL, RailTel TCIL போன்ற நிறுவனங்கள் தான் இந்த டாப் 10 நிறுவன பட்டியலில் இருக்கிறதாம்.
எது எப்படியோ மத்திய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதை அறியவே கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. கடன் வாங்குறது முக்கியம் இல்ல மோடிஜி அத ஒழுங்கா திருப்பி அடைக்கணும். அதையும் கொஞ்சம் பாத்துக்குங்க.