2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்துள்ள, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி விவசாயிகள் நல நிதியின் கீழ், ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது.
இந்த தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில், மூன்று தவணையாக நேரடியாக செலுத்தப்படும் எனவு பட்ஜெட்டிலேயே அறிவித்தார்கள்.
இந்த புதிய விவசாயிகள் வருமான திட்டத்தினால் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன் அடையும். இத்திட்டத்தின் மூலம், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் அருண் ஜெட்லி என்ன சொல்கிறார்... இனி அவர் பேசியதில் இருந்து
அருண் ஜெட்லி
"விவசாய பிரச்னைகளை கருத்தில் கொண்டே, 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். இதனுடன் வீடு, மானிய விலையில் உணவு, குறைந்த விலையில் மருத்துவ வசதி, சுகாதாரம் சார்ந்த சேவைகள், மின்சாரம், சாலை மற்றும் கேஸ் இணைப்பு உள்ளிட்ட அரசின் திட்டங்களும் அளிக்கிறோம்.
இன்னும் அதிகரிக்கும்
பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு உதவித்தொகை தற்போது முதல்முறையாக வழங்கப்படுகிறது. அரசின் வருமானம் அதிகரிக்கும் போது, உதவித்தொகையும் தானாகவே அதிகரிக்கப்படும். தற்போது, இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மாநில அரசுகளும் இது போன்று திட்டங்களை அறிவிக்கும் போது, விவசாயிகளுக்கு, கிடைக்கும் உதவித்தொகை மேலும் அதிகரிக்கத் தானே செய்யும்.
மாநிலங்களும் தொடங்கட்டுமே
ஏற்கனவே சில மாநிலங்கள் (தெலுங்கானா - ரய்து பந்து) தன் விவசாயிகளுக்கு ஒரு குறைந்தபட்ச வருமானத்தைக் கொடுத்து வருகிறது. இதோடு மத்திய அரசின் 6,000 ரூபாயும் சேரும் போது ஒரு கணிசமான தொகை நம் விவசாயிகளுக்கு கிடைக்கத் தானே செய்யும்.
மாநிலங்கள் பகிரட்டுமே
இதற்கும் ஒரு படி மேலே வழக்கம் போல மத்திய அரசு திட்டங்களில் 60% நிதி மத்திய அரசும், மாநில அரசு 40% தொகையும் முதலீடு செய்யும். அப்படி இந்த திட்டத்தை மேம்படுத்தத் தயார் என்றால் இன்னும் இந்த திட்டத்தை ஒரு படி மேலே கொண்டு செல்லலாம். இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல், எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏதோ கல்லூரி யூனியன் தேர்தலில் நிற்பது போல ஒரு நாளுக்கு 17 ரூபாய் போதுமா என பிதற்றுவது நகைப்புக்குரியது" என ராகுலை காலி செய்கிறார். இன்னும் ராகுல் காந்தி வளரவே இல்லை என்பதற்கு இது தான் சாட்சி.